ஆணுறை, பாலியல் கல்வி.. அடுத்தடுத்து உளறிக் கொட்டும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன்
டெல்லி: ஆணுறை பிரசாரத்தை ஏகடியம் செய்வது, பாலியல் கல்விக்கு தடை விதிக்க வேண்டும் என்பது போன்ற பேச்சுகளால் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கடும் எதிர்ப்பை சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சரான டாக்டர் ஹர்ஷ்வர்தன் கடந்த சில நாட்களாக தெரிவித்து வரும் கருத்துகள் அபத்தங்களின் உச்சமாகவே இருந்து வருகிறது. ஆட்கொல்லி நோயான எய்ட்ஸை தடுக்க ஆணுறை அணிவது அவசியம் என்பது பொதுவான பிரசாரம்.
இதற்கான பிரசாரத்தை அரசாங்கமே மேற்கொண்டு வருகிறது. ஆனால் டாக்டர் ஹர்ஷ்வர்தனோ இதற்கு நேர் எதிராக கருத்துகளை தெரிவித்து வம்பில் சிக்கினார்.
ஒருத்தனுக்கு ஒருத்திதான் சரி
"இந்திய கலாச்சாரத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என்பதை கடைபிடிக்க வேண்டும் என்பது நியதியாகும். அந்த நியதியை கடைபிடித்து நம்பமாக செயல்பட்டால் எய்ட்ஸ் நோய் உருவாகாமல் தடுக்கமுடியும்.
ஆணுறை பிரசாரம் தப்பு
மாறாக தவறான பாலியல் உறவில் ஈடுபடும்போது ஆணுறை உபயோகியுங்கள் என்று அரசாங்கமே கூறுவது, தவறான செயலை ஆதரிப்பது போல் உள்ளது" என்பதுதான் ஹர்ஷ்வர்தனின் கருத்து. இதற்கு தன்னார்வ அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
மனுவாதி
"ஒருவனுக்கு ஒருத்தி" என்ற ஆணாதிக்க மனோபாவத்தின் உச்ச வெளிப்பாடு அல்லது பெண்ணடிமைத்தனத்தை வலியுறுத்துகிற மனுநீதியின் முன்மொழிவாகவே ஹர்ஷ்வர்தனின் பேச்சு இருக்கிறது என்பது பெண்ணியவாதிகளின் கருத்து.
புது சர்ச்சை
இந்த களேபர சர்ச்சை முடிவதற்குள்ளாக பள்ளிகளில் பாலியல் கல்வியைத் தடை செய்ய வேண்டும் என்று கொளுத்திப் போட்டிருக்கிறார் ஹர்ஷவர்தன்.
பாலியல் கல்விக்கு தடை
அதாவது :இந்திய கலாசார தொடர்பு குறித்து மதிப்புமிக்க கல்வியை உள்ளடக்கம் கொண்ட பாடத்திட்டங்களை உருவாக்கவேண்டும். பாலியல் கல்வியை பள்ளிகளில் தடை செய்ய வேண்டும்" என்பது ஹர்ஷவர்தனின் புதிய கருத்து.
எதற்காக பாலியல் கல்வி?
ஏற்கெனவே பெருகிவிட்ட பாலியல் குற்றங்களால் அதுவும் குறிப்பாக சிறுவர்கள் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவது அதிகமாகத்தான் அப்படியான ஒரு கல்வியையே பள்ளிகளில் வைக்க வேண்டிய தேவையை உருவாக்கியது.
வேற்றுகிரகவாசியா?
ஆனால் கண்ணை இறுக மூடிக் கொண்டு ஏதோ வேற்றுகிரகவாசி போல ஹர்ஷவர்தன் பேசிக் கொண்டிருப்பது நகைக்குப்புக்குரியதாகவே இருக்கிறது. இவருக்கெல்லாம் அமைச்சர் பதவியே என்ற எதிர்வினையும் குவிந்து கொண்டிருக்கிறது.