மயக்க மருந்து தூவி பெண்களின் கூந்தலை திருடும் மர்ம கும்பல்... போலீசில் குவியும் புகார்கள்
டெல்லி மற்றும் ஹரியானா மாநிலங்களில், வீட்டில் தனியாக இருக்கும் பெண்களிடம் மயக்கமருந்து தூவி, அவர்களின் கூந்தலை வெட்டி திருடிச் செல்லும் மர்மக்கும்பல் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
குர்ஹாம்: மயக்க மருந்து தூவி பெண்களின் கூந்தலை வெட்டிச் செல்லும் மர்ம கும்பலின் அட்டகாசத்தால் ஹரியானா மற்றும் டெல்லி பெண்கள் மத்தியில் பீதி நிலவுகிறது. இது தொடர்பாக புகார்கள் குவிவதால் போலீசார் விழி பிதுங்கி நிற்கிறார்கள்.
வீடு புகுந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் செல்லும் கொள்ளைக்காரர்கள் மத்தியில், பெண்களின் தலைமுடியை வெட்டிச் செல்லும் வினோத கொள்ளை கும்பலின் அட்டகாசம் டெல்லி மற்றும் ஹரியானா மாநிலங்களில் அதிகரித்துள்ளது.
ஹரியானா மற்றும் டெல்லியின் எல்லையோர கிராமங்களில் முன்பின் அறிமுகமில்லாத நபர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் குர்ஹாம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெண்கள் 'கூந்தலை காணோம்' என்று காவல்நிலையத்தில் தினமும் புகார்கள் அளித்து போலீசாரை திணறடித்து வருகிறார்கள்.
இதுவரை 500க்கும் மேற்பட்ட தலைமுடி காணாமல் போன புகார்கள் குர்ஹாம் போலீஸ் நிலையத்தில் குவிந்துள்ளன. இதனால் தனிப்படை அமைத்துப் போலீசார் கூந்தல் திருடும் கும்பலை வலைவீசித் தேடி வருகிறார்கள்.
டீன் ஏஜ் பெண்கள் முதல் முதிய வயது பெண்மணிகள் வரை கூந்தல் திருட்டு சம்பவத்தில் பாதிக்கப்படும் நிலை உள்ளதால், வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களிடம் பீதி நிலவுகிறது.