கர்நாடக அரசுக்கு கதம்.. பாஜகவின் அடுத்த குறி எந்த மாநிலத்திற்கு தெரியுமா?
Recommended Video
டெல்லி: கர்நாடக ஆட்சியை எப்படியோ கலைத்தாகிவிட்டது, அடுத்து, பாஜக வேறு ஒரு பெரிய மாநிலத்தை நோக்கி தனது குறியை மாற்றியுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கர்நாடகாவில் காங்கிரஸ்-மஜத ஆட்சியை கலைக்க, எம்எல்ஏக்கள் ராஜினாமா என்ற திட்டத்தை கையில் எடுத்தது பாஜக. அதன் அடுத்த குறி, காங்கிரஸ் ஆளும் மத்திய பிரதேசம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
மத்திய பிரதேச சட்டசபைத் தேர்தலில், மொத்தமுள்ள 230 தொகுதிகளில் 114 இடங்களை காங்கிரஸ் வென்றது. 108 இடங்களைப் பிடித்த பாஜகவை விட சிறு அளவிலான வித்தியாசம்தான்.
அடுத்து ம.பி.. பின் ராஜஸ்தான்.. அமித் ஷாவின் அதிரடி பிளான்.. அகண்ட பாரத கனவை நெருங்கும் பாஜக!
கோஷ்டி பூசல்
பெரும்பான்மைக்கு தேவை 116 என்பதால், நான்கு சுயேச்சைகள், இரண்டு பகுஜன் சமாஜ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஒரு சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ ஆகியோரின் உதவியுடன் காங்கிரஸ் அரசு அமைக்க முடிந்தது. ஆனால், ஒரு தசாப்தத்திற்கும் மேலாக காங்கிரஸ் கட்சியை ஆட்சியை பிடிக்க முடியாமல் வைத்திருந்த அதே கோஷ்டி பூசல் மீண்டும் வெடித்தது. இது பாஜகவுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க பாஜக வலையோடு தயாராகியுள்ளது.
பின்னடைவு
இந்த நிலையில்தான் கர்நாடகாவில் அதிகாரத்தை இழப்பது காங்கிரசுக்கு மிக மோசமான பின்னடைவாகும். அதுவும் ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகிய நேரத்தில், அவருக்குப் பதிலாக எந்தத் தலைவரும் நியமிக்கப்படாத நிலையில் இந்த அடி விழுந்துள்ளது. இப்போதே மத்திய பிரதேசத்தில் ஆபரேஷன் லோட்டஸ் அறிகுறிகள் தெரிய ஆரம்பித்துவிட்டது. பல காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பாஜகவுடன் "தொடர்பில் உள்ளனர்" என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
நான்கு கோஷ்டிகள்
காங்கிரஸைப் பொறுத்தவரை ஏறக்குறைய நான்கு பிரிவுகள் உள்ளன. ஜோதிராதித்ய சிந்தியா, அருண் யாதவ், அஜய் சிங் மற்றும் கமல்நாத்-திக்விஜய் சிங் கோஷ்டிகள் நடுவே பெரும் போட்டி நடக்கிறது. காங்கிரசில் உள்ள கோஷ்டிவாதத்தை சாதகமாக்க பாஜக முயன்று கொண்டிருக்கையில், பாஜகவுக்கு "ஈஸியான இலக்கு" என்பது சுயேச்சைகள் மற்றும் சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள்தான் என்று காங்கிரஸ் தலைவர்கள் கருதுகின்றனர்.
சுயேச்சைகள் எளிது
கர்நாடகாவிலும் 2 சுயேச்சைகளை தங்கள் பக்கம் இழுப்பதில் பாஜக வெற்றி கண்டது. அதுபோல மத்திய பிரதேசத்திலும், அஸ்திரத்தை ஏவ பாஜக ரெடியாகி வருகிறது. காங்கிரஸ் இல்லாத பாரதம் என்ற கோஷத்தை பாஜக மக்கள் மன்றத்தின் மூலமாக இன்றி, பின் வழி, குறுக்கு வழிகள் வாயிலாகவும் எட்ட முழு முயற்சிகளை எடுத்து வருகிறது. ஹரியானா, ஜார்கண்ட் மற்றும் மகாராஷ்டிராவில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், கர்நாடகாவில் ஆட்சியை இழப்பது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் அடியாக பார்க்கப்படுகிறது.