மேகியை அடுத்து சந்தையில் இருந்து வாபஸ் பெறப்பட்ட டாப் ராமன் நூடுல்ஸ்
டெல்லி: டாப் ராமன் நூடுல்ஸை சந்தையில் இருந்து திரும்பப் பெறுவதாக இன்டோ நிஸ்ஸின் நிறுவனம் அறிவித்துள்ளது.
நெஸ்லே நிறுவன தயாரிப்பான மேகி நூடுல்ஸில் அளவுக்கு அதிகமாக ஈயம் மற்றும் மோனோசோடியம் க்ளூட்டமேட் இருப்பதை அடுத்து அதற்கு உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் தடை விதித்தது. இதையடுத்து மேகி நூடுல்ஸை நெஸ்லே நிறுவனம் சந்தையில் இருந்து திரும்பப் பெற்றது.
மேகியை அடுத்து இந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனம் தனது நார் நூடுல்ஸை சந்தையில் இருந்து திரும்பப் பெற்றது. இதையடுத்து அனைத்து நூடுல்ஸ் தயாரிப்புகளை சோதனை செய்யுமாறு உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் கடந்த 8ம் தேதி உத்தரவிட்டது.
டாப் ராமன்
டாப் ராமன் நூடுல்ஸுக்கு உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் அங்கீகாரம் அளிக்கவில்லை. இதையடுத்து அந்நிறுவனம் அங்கீகாரம் கோரி விண்ணப்பம் செய்துள்ளது.
வாபஸ்
டாப் ராமன் நூடுல்ஸுக்கு உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் இன்னும் அங்கீகாரம் அளிக்காததால் அதை சந்தையில் இருந்து திரும்பப் பெறுவதாக இன்டோ நிஸ்ஸின் நிறுவன மேனேஜிங் டைரக்டர் கௌதம் சர்மா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஆய்வு
டாப் ராமன் நூடுல்ஸ் மாதிரிகளை உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட 2 ஆய்வகங்களில் ஆய்வு செய்து அதன் முடிவை ஆணையத்திடம் அளித்துள்ளோம். நாடு முழுவதும் உள்ள பல்வேறு ஆய்வகங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் 2 இடங்களில் மட்டும் டேஸ்ட்மேக்கரில் அளவுக்கு அதிகமாக ஈயம் இருப்பது தெரிய வந்துள்ளது என்று சர்மா தெரிவித்துள்ளார்.
மேகி
தடையை அடுத்து வாபஸ் பெறப்பட்ட ரூ.320 கோடி மதிப்புள்ள மேகி நூடுல்ஸை நெஸ்லே நிறுவனம் பல்வேறு சிமெண்ட் ஆலைகளில் வைத்து அழித்தது என்பது குறிப்பிடத்தக்கது.