அடுத்தடுத்து புரட்சி செய்யும் காங்கிரஸ்.. ம.பி.யை தொடர்ந்து சத்தீஸ்கரிலும் விவசாயக் கடன் தள்ளுபடி!
Recommended Video
ராய்ப்பூர்: மத்திய பிரதேச மாநிலத்தில் நேற்று முதல்வராக பொறுப்பேற்ற கமல்நாத் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்தார். இதே போல் சத்தீஸ்கர் மாநில முதல்வராக பதவியேற்ற கையோடு பூபேஷ் பாகலும் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்தார்.
தமிழகம் போல் பிற மாநிலங்களிலும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என லட்சக்கணக்கான விவசாயிகள் அவ்வப்போது டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் தமிழகத்தை சேர்ந்த விவசாயிகள் தனியாகவும், பிற மாநில விவசாயிகளுடனும் போராட்டம் நடத்துகின்றனர்.
எனினும் மத்தியில் ஆளும் பாஜக அரசோ விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய முடியாது என கூறிவிட்டது. இதனால் விவசாயிகள் சொல்லொண்ணா துயரில் உள்ளனர். சிலர் விவசாயத்துக்காக வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தற்கொலை செய்யும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
காங்கிரஸ்
இத்தகைய போராட்டங்கள் நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. இதையடுத்து ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி பெரும் வெற்றி பெற்றது.
கடன் தள்ளுபடி
இதையடுத்து மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய முதல்வர்கள் நேற்று பதவியேற்றுக் கொண்டனர். இதில் மத்திய பிரதேச மாநிலத்தின் முதல்வரான கமல்நாத் பதவியேற்ற கையுடன் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
புரட்சி
அதுபோல் சத்தீஸ்கர் மாநிலத்திலும் விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இது போல் அடுத்தடுத்த புரட்சி ராஜஸ்தானில் எப்போது வரும் என அம்மாநில விவசாயிகள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
விவசாயிகள் எதிர்பார்ப்பு
இந்த நிலையில் தமிழகத்தில் கஜா புயல், கடும் வறட்சி, பயிர்களுக்கு உரிய விலை கிடைக்காதது, பயிர்கள் விலை போகாதது உள்ளிட்ட பிரச்சினைகளால் விவசாயிகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர். எனவே காங்கிரஸ் பொறுப்பேற்ற மாநிலங்களில் விவசாய கடன் தள்ளுபடி செய்தது போல் தமிழக அரசும் செய்ய வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாகும்.