மோடியைத் தொடர்ந்து தாவூத் இப்ராகிமுக்கு விருந்து வைத்த நவாஸ் ஷெரீப்- திடுக் தகவல்
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடிக்கு விருந்து வைத்த கையோடு இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதியான நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமுக்கும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் விருந்து வைத்ததாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
அண்மையில் ரஷ்யா- ஆப்கானிஸ்தான் பயணத்தை மேற்கொண்டிருந்த பிரதமர் மோடி திடீரென பாகிஸ்தானுக்கும் சென்றார். அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு பிறந்த நாள் தெரிவித்த கையோடு, அவரது பேத்தியின் திருமண நிகழ்ச்சியிலும் மோடி கலந்து கொண்டார்.
இது கடும் சர்ச்சையை கிளப்பிய போதும் அண்டை நாடுகளுடனுனான நல்லுறவை வலுப்படுத்தும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை மோடி மேற்கொண்டுள்ளார் என பாராட்டப்பட்டது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் விமான படை தளம் மீது பாகிஸ்தானில் இருந்து ஊடுருவிய தீவிரவாதிகள் கொடூர தாக்குதலை நடத்தினர்.
இதில் இந்திய ராணுவ வீரர்கள் 7 பேர் வீரமரணமடைந்தனர். இதனைத் தொடர்ந்து இத்தாக்குதலில் தொடர்புடையோரை தண்டிக்க பாகிஸ்தானும் தம் பங்குக்கு தீவிர விசாரணை நடத்தி வருவதாக கூறப்பட்டது. இந்நிலையில் பாகிஸ்தானின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தும் வகையிலான திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதாவது நவாஸ் ஷெரீப்பின் பிறந்த நாள் மற்றும் இல்ல திருமணத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டதற்கு மறுநாள் பாகிஸ்தானில் பதுங்கியிருக்கும் இந்தியாவால் தேடப்படும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமும் நவாஸ் ஷெரீப் வீட்டு விருந்தில் கலந்து கொண்டிருக்கிறார். அவருடன் மும்பையைச் சேர்ந்த சில தொழிலதிபர்களும் இவ்விருந்தில் கலந்து கொண்டனர்.
தாவூத் இப்ராகிமின் குடுபத்துக்கே நவாஸ் ஷெரீப் தடபுடலாக விருந்து வைத்திருந்தாராம்.. முன்னதாக கடந்த டிசம்பர் 25-26 தேதிகளில் தாவூத்தின் வலது கரம் சோட்டா ஷகீலின் தொலைபேசி உரையாடல்களை இடைமறித்து உளவுத்துறை கேட்டபோது முக்கியமான திருமண விழாவில் தாவூத் கலந்து கொள்ள இருப்பதும் உறுதி செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.