ஒடிஷா முதல்வர் நவீன் பட்னாநாயக் சூசகம்.. பிஜேடியின் புதிய தலைவராகிறாரா தமிழரான விகே பாண்டியன்?
புவனேஸ்வர்: ஒடிஷாவில் பிஜூ ஜனதா தளம் (பிஜேடி) கட்சியின் அடுத்த தலைவர் குறித்து அக்கட்சித் தலைவரும் முதல்வருமான நவீன் பட்நாயக் சூசகமாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து பிஜேடியின் தலைவராக 45 வயது தமிழரான ஐ.ஏ.எஸ். அதிகாரி வி.கே பாண்டியனுக்கே வாய்ப்பு என ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
ஒடிஷாவின் முதல்வராக அண்மையில் 5-வது முறையாக நவீன் பட்நாயக் மீண்டும் பதவியேற்றார். நவீன் பட்நாயக் எளிமையானவர்; நல்லாட்சி தருகிறார் என்ற அடிப்படையில் அவருக்கு ஒடிஷா வாக்காளர்கள் தொடர்ந்து ஆதரவு தருகின்றனர்.
இந்நிலையில் பிஜூ ஜனதா தளம் கட்சியின் 23-வது ஆண்டு விழாவை முன்னிட்டு புவனேஸ்வரில் கட்சி நிர்வாகிகளிடம் நவீன் பட்நாயக் உரையாற்றினார். அப்போது பேசிய நவீன் பட்நாயக், என்னுடைய தந்தை பிஜூ பட்நாயக், தமக்கு விசுவாசமாக இருப்பதைவிட ஒடிஷா மண்ணுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதையே விரும்பினார். அதனால்தான் பிஜூ ஜனதா தளம் இன்று மக்கள் இயக்கமாக இருக்கிறது என்றார்.
ஹரியானாவில் 2 மாத பாஜக அரசுக்கு திடீர் நெருக்கடி- ஆதரவு தரும் ஜேஜேபியில் சலசலப்பு
நவீன் சூசக பேச்சு?
அத்துடன் பிஜூ ஜனதா தளமானது அதன் வளர்ச்சிக்காக என்னையோ அல்லது சில தலைவர்களையோ மட்டும் நம்பியும் இருக்கவில்லை எனவும் நவீன் பட்நாயக் குறிப்பிட்டார். இதனை முன்வைத்துதான் நவீன் பட்நாயக், பிஜேடியின் அடுத்த தலைவர் குறித்து சூசகமாக தெரிவித்துவிட்டார் என ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.
வாரிசுகள் தலைவராக இல்லை?
7 மாதங்களுக்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய நவீன் பட்நாயக், பிஜேடியின் புதிய தலைவராக கட்சியைச் சேர்ந்த ஒருவரே இருப்பார். மக்களே அவரை தேர்ந்தெடுப்பார்கள் என குறிப்பிட்டிருந்தார். தற்போது நவீன் பட்நாயக் பேசியிருப்பதை முன்வைத்து, தமது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் நிச்சயம் பிஜேடி தலைவராகப் போவதில்லை என்பதையே பகிரங்கப்படுத்தி இருக்கிறார் என்கின்றன ஊடகங்கள்.
பிஜேடி தலைவராகிறாரா பாண்டியன்?
அப்படியான நிலையில் பிஜேடியின் புதிய தலைவர் யாராக இருக்க முடியும் என்கிற கேள்விக்கு 45 வயது தமிழரான ஐ.ஏ.எஸ். அதிகாரி வி. கார்த்திகேய பாண்டியனை (விகே பாண்டியன்) நோக்கியே கைகள் நீள்கின்றன. தமிழகத்தின் மேலூரை சேர்ந்தவர் வி.கே. பாண்டியன். இவர் நவீன் பட்நாயக்கின் மிகவும் நம்பிக்கைக்குரிய தனி செயலாளராக இருப்பவர்.
பிஜேடியின் தூண் விகே பாண்டியன்
பிஜூ ஜனதா தளத்தில் தேர்தல் வெற்றிக்கு விகே பாண்டியனின் பங்களிப்பு மிகப் பெரியது. ஒடிஷா மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு அரசின் நலத் திட்டங்கள் எப்படி எல்லாம் மக்களை சென்றடைய வேண்டும் என்பதற்கான திட்டங்களை வகுத்து கொண்டு பிஜூ ஜனதா தளத்தை மீண்டும் ஆட்சியில் அமர வைத்தவர். அதனால்தான் சட்டசபை, லோக்சபா தேர்தல்களின் போது விகே பாண்டியனை முன்வைத்து விமர்சனங்கள் கடுமையாக எழும்.
பாஜக தாக்குதல்
கடந்த ஆண்டு பாஜகவினர் விகே பாண்டியன் வீடு மீது தாக்குதல் நடத்தியிருந்தனர். ஆனாலும் விகே பாண்டியன், தொடர்ந்து நவீன் பட்நாயக்கின் தளபதியாக இருந்து வருகிறார். அவரது மனைவி சுஜாதாவும் ஒடிஷா ஐ.ஏ.எஸ். அதிகாரி. இருவரும் தமிழர்கள் என்கிற வேற்று மாநிலத்தவர் முழக்கத்தை கூட எதிர்க்கட்சியினர் வைத்து பார்த்தனர். ஆனாலும் நவீன் பட்நாயக்கும் பிஜேடியும் விகே பாண்டியன் மீது நம்பிக்கை வைத்தனர். அந்த நம்பிக்கைக்கு மிகவும் தகுதியானவராக விகே பாண்டியன் செயல்பட்டதால் பிஜேடியின் அடுத்த தலைவர் பதவிக்கு அவரை நோக்கி ஊடகங்கள் கை காட்டுகின்றன என்பது நிதர்சனம்.