காஷ்மீர் பிரச்சனையை அரசியலாக்குகிறார்- பொய் செய்தி பரப்புகிறார் ராகுல்- காஷ்மீர் ஆளுநர் அலுவலகம்
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் அசாதாரண நிலையை ஏற்படுத்தி பிரச்சனைகளை உருவாக்கவே அனைத்து கட்சி அரசியல் தலைவர்களை அழைத்து வர அனுமதி கோருகிறார் ராகுல் காந்தி என்று அம்மாநில ஆளுநரின் அலுவலகம் குற்றம்சாட்டியுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் வன்முறைகள் நிகழ்கின்றன என கூறியிருந்தார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. இதற்கு அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் மிக கடுமையாக மறுப்பு தெரிவித்திருந்தார்.
அவர் தமது மறுப்பில், உங்களுக்கு விமானத்தை அனுப்புகிறேன். அதில் வந்து காஷ்மீர் நிலவரத்தை பார்த்துவிட்டு பேசுங்கள் என கூறியிருந்தார். இதற்கு பதில் தந்த ராகுல் காந்தி, உங்கள் விமானம் வேண்டாம். அரசியல் கட்சித் தலைவர்களுடன் வருகிறோம். மக்களை சுதந்திரமாக சந்திக்க அனுமதி தாருங்கள் என விமர்சித்திருந்தார்.
இதனை சுட்டிக்காட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநர் அலுவலகம், ராகுல் காந்தி பொய் செய்திகளை பரப்புவதற்கு பொறுப்பேற்க வேண்டும். இந்திய சேனல்கள் காஷ்மீர் குறித்து சரியான தகவல்களையே வெளியிட்டு வருகின்றன. அத்துடன் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு இன்று தாக்கல் செய்திருக்கும் அறிக்கையை படிக்க வேண்டும்.
Raj Bhawan J&K clarification on recent Tweet of Sh @RahulGandhi pic.twitter.com/UFYApPFO39
— DIPR-J&K (@diprjk) August 13, 2019
ராகுல் காந்தி இப்பிரச்சனையை அரசியலாக்கும் வகையில் அரசியல் கட்சித் தலைவர்களை அழைத்து வந்து மக்களை சந்திக்க அனுமதி கோருகிறார். இப்படி செய்வது ஜம்மு காஷ்மீரில் அசாதாரண சூழ்நிலையை உருவாக்கி மக்களிடையே பிரச்சனைகளை தூண்டிவிடும் முயற்சியாகும் என பதிலளிக்கப்பட்டுள்ளது.