சோட்டா ராஜனைத் தொடர்ந்து பொறியில் சிக்கப் போவது 'தாவூத் இப்ராகிம்'?
மும்பை: நிழல் உலக தாதா சோட்டா ராஜன் சிக்கியிருக்கும் நிலையில் இந்தியாவால் தேடப்படும் மற்றொரு நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமும் விரைவில் பிடிபடுவாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
மும்பை நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராகிமின் நெருங்கிய கூட்டாளியாக இருந்தவர் சோட்டா ராஜன். ஆனால் 1993ஆம் ஆண்டு மும்பை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து இருவரும் எதிரிகளாகினர்.
இதன் பின்னர் தாவூத் கும்பலைச் சேர்ந்தவர்களை சோட்டா ராஜன் கோஷ்டி வரிசையாக பலியெடுத்தது. இதனால் சோட்டா ராஜனை தாவூத் கும்பல் தேடி வந்தது.
இந்நிலையில்தான் இந்தோனேசியாவின் பாலி தீவில் சோட்டா ராஜன் சிக்கியிருக்கிறார். அவர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட உள்ளார். சோட்டா ராஜனின் இந்த கைது நடவடிக்கையானது தாவூத்துக்கும் குறி வைக்கப்பட்டுவிட்டது என்பதை வெளிப்படுத்துகிறதா? தாவூத் இப்ராகிமும் பிடிக்கப்பட்டு இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதாரா? என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.
இது தொடர்பாக இந்திய கொள்கை வகுப்பு அமைப்பான 'ரா'வின் முன்னாள் அதிகாரி வி. பாலச்சந்திரனிடம் நமது ஒன் இந்தியா உரையாடியதில் இருந்து பெறப்பட்ட முக்கிய தகவல்கள்:
தற்போது சோட்டா ராஜனின் பாதுகாப்புதான் கவலைக்குரியதாக இருக்கிறது. இந்தோனேசியாவில் இருந்து இந்தியாவுக்கு சோட்டா ராஜனை கொண்டுவரும்போது பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். ஏனெனில் சோட்டா ராஜனுக்கு அவ்வளவு எதிரிகள் இருக்கின்றன.
தாவூத் இப்ராகிமைப் பொறுத்தவரையில் அவர்களது நெட்வொர்க் அதிகம் நீதிமன்றத்திலும் சிறைச்சாலைகளிலும் இருக்கிறது.. ஆகையால் சோட்டா ராஜனின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. மற்றொன்றையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்... சோட்டா ராஜன் ஒன்றும் இளைஞர் அல்ல.. அவர் உடல்நலனையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்த நேரத்தில் தாவூத் கும்பலைச் சேர்ந்த சோட்டா ஷகீலின் எச்சரிக்கையையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்திய சிறைச்சாலைகள் மிக மோசமான ஊழல் மலிந்ததாக இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சோட்டா ராஜன் பிடிபட்ட நிலையில் தாவூத் இப்ராகிமை இந்தியாவுக்கு கொண்டு வருவது சிரமம்தான்... அதே நேரத்தில் முடியாதது என்பது அல்ல. 1994ஆம் ஆண்டு தாவூத் இப்ராகிமை தென்னாப்பிரிக்காவில் வளைக்கக் கூடிய அருமையான வாய்ப்பு கிடைத்தது. அப்போதைய அரசு இதில் பின்வாங்கியது... தாவூத்தை கைது செய்தால் பல்வேறு பெருந்தலைகளின் பெயர்களும் அடிபடும் என கருதியிருக்கலாம்.
தாவூத்தைப் பொறுத்தவரையில் பல்வேறு நாடுகளில் தொடர்பு வைத்திருக்கிறார். அதனால் தனது பாதுகாப்பை உறுதி செய்திருக்கிறார். ஆனால் சோட்டா ராஜன் கடந்த ஓராண்டாக தனிநபராகத்தான் இருக்கிறார்.. தற்போதும் கூட தாவூத் குறித்த தகவல்கள் சோட்டா ராஜனிடம் இருக்குமா என்பது கேள்விக்குறிதான்.
இந்தோனேசியாவுடன் குற்றவாளிகளை பரிமாறும் ஒப்பந்தம் எதுவும் இல்லையென்றாலும் கூட பல்வேறு வழிகளிலும் சோட்டா ராஜனை இந்தியாவுக்கு கொண்டு வந்துவிடலாம். அப்படி இந்தியாவுக்கு சோட்டா ராஜனை கொண்டுவந்தாலும் எந்த ஒரு மாற்றமும் நிகழப் போவதில்லை... மகிழ்ச்சியாக சிறைக் கம்பிகளின் பின்னால் சோட்டா ராஜன் மகிழ்ச்சியாக இருக்கப் போவதைத் தவிர....