ராஜஸ்தானை தொடர்ந்து ஜார்கண்டிலும்.. ஆட்சிக்கு எதிராக குதிக்கும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள்.. திருப்பம்!
ராஞ்சி: ராஜஸ்தானை தொடர்ந்து ஜார்கண்டிலும் தற்போது காங்கிரஸ் கட்சிக்குள் குழப்பம் ஏற்பட தொடங்கி உள்ளது. அங்கு காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டுள்ள குழப்பம் காரணமாக ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான ஆட்சிக்கு ஆபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது ராஜஸ்தானில் பெரிய அளவில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்குள் அங்கு ஏற்பட்டு இருக்கும் குழப்பம் காரணமாக, ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டடுள்ளது. அங்கு சட்டசபையை கூட்டி தனது பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் அசோக் கெலாட் தீவிரமாக முயன்று வருகிறார்.
தனக்கு மொத்தம் 102 எம்எல்ஏக்கள் ஆதரவு இருக்கிறது என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். இதனால் உடனே சட்டசபையை கூட்ட வேண்டும் என்று அவர் திட்டமிட்டு வருகிறார். ஆட்சி மற்றும் ஆட்சிக்கு எதிராக சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்ககி திரும்பி உள்ளனர்.
இந்த நிலையில் ராஜஸ்தானை தொடர்ந்து ஜார்கண்டிலும் தற்போது காங்கிரஸ் கட்சிக்குள் குழப்பம் ஏற்பட தொடங்கி உள்ளது. காங்கிரஸ் கட்சியில் இருக்கும் 15 எம்எல்ஏக்கள் மாநில காங்கிரஸ் தலைமைக்கு எதிராக திரும்பி உள்ளனர்.
அங்கு காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டுள்ள குழப்பம் காரணமாக முதல்வர் ஹேமந்த் சோரனின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான ஆட்சிக்கு ஆபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த எம்எல்ஏக்கள் ஹேமந்த் சோரனின் ஆட்சிக்கு எதிராக குரல் கொடுக்க தொடங்கி உள்ளனர்.
ஹேமந்த் சோரனின் ஆட்சியில் தங்களுக்கு சரியான மரியாதை இல்லை என்று இவர்கள் கூறியுள்ளனர். இந்த 15 எம்எல்ஏக்களை மூன்று மூத்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வழிநடாத்துகிறார்கள். அதன்படி இர்பான் அன்சாரி, உமாசங்கர் அகேகா, ராஜேஷ் காஷ்யப்ஆகியோர் இவர்களை வழி நடத்துவதாக கூறப்படுகிறது.
அதேபோல் விவி கொங்கிரி, பூஷன் பாரா, மம்தா தேவி, ஆம்பா பிரசாத், பூர்ணிமா என் சிங் ,ராம் சந்திர சிங் ஆகியோரும் ஆட்சிக்கு எதிராக திரும்பி உள்ளனர். இன்னொரு பக்கம் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவும் இவர்கள் திரும்பி உள்ளனர்.
ஒரே ஒரு டிவீட்.. ஒரே ஒரு வரி.. டோட்டல் காங்கிரஸும் டரியலாகிப் போச்சு.. குஷ்பு கடுப்பு!
காரணம் 1
ஜார்கண்டில் இப்படி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் புரட்சி செய்ய காரணம், அங்கு இருக்கும் 1 அமைச்சர் பதவி. அமைச்சரவையில் 12 இடங்களில் 11 இடங்கள் நிரப்பப்பட்ட நிலையில் இன்னும் 1 இடம் மீதம் உள்ளது. இதை யார் பிடிப்பது என்ற மோதல் காங்கிரஸ் கட்சியில் உருவெடுத்து, தற்போது அது அணி சேரும் நிலைக்கு மாறியுள்ளது.
காரணம் 2
அதேபோல் இன்னொரு பக்கம் ஜார்கண்ட் மாநில காங்கிரஸ் தலைவருக்கும் எம்எல்ஏக்களுக்கும் மோதல் வந்துள்ளது . அங்கு ஜார்கண்ட் மாநில காங்கிரஸ் தலைவராக ராமேஸ்வர் ஓரான் இருக்கிறார். இதே ராமேஸ்வர் ஓரான்தான் அங்கு நிதி அமைச்சராகவும் இருக்கிறார். ஒரே நபர் இரண்டு பெரிய பொறுப்புகளை வகிப்பது அங்கு இருக்கும் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு கோபத்தை உண்டாக்கி உள்ளது. இதுவும் இந்த புரட்சிக்கு காரணம் என்கிறார்கள்.
காரணம் 3
மூன்றாவது காரணமாக, அங்கு இருக்கும் பாஜக பல நாட்களாக ஆட்சியை பிடிக்க முயன்று வருகிறது. ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவிற்கு ஆதரவு அளித்து, அங்கு கூட்டணி ஆட்சியை அமைக்க பாஜக முயன்று வருகிறது. இதனால் சில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கட்சி தாவ வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள்.
எத்தனை பேர் உள்ளனர்:
ஜார்கண்டில் மொத்தம் 82 சட்டசபை இடங்கள் உள்ளது. ஆட்சி அமைக்க 42 இடங்கள் தேவை. ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணியில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவிற்கு 29 இடங்கள் உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 17 இடங்கள் உள்ளது. மொத்தமாக அந்த கூட்டணிக்கு 49 இடங்கள் உள்ளது. என்டிஏ கூட்டணியில், பாஜகவிற்கு 26 இடங்கள் உள்ளது. மொத்தமாக பாஜக கூட்டணிக்கு 30 இடங்கள் உள்ளது.