ஃப்ரீடம் 251 போனை விடுங்க... அடுத்து ஃப்ரீடம் ஹெச்டி எல்இடி டி.வி ரூ. 9990க்கு வருதாம்!
டெல்லி: உலகிலேயே மிக குறைவான விலைக்கு ஃப்ரீடம் 251' என்ற செல்போனை அறிமுகப்படுத்திய ரிங்கிங்பெல் நிறுவனம், தற்போது குறைந்த விலையில் எல்இடி டிவியை அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
டெல்லி அருகே நொய்டாவை தலைமையிடாகக் கொண்டு தொடங்கப்பட்டுள்ள ரிங்கிங் பெல் நிறுவனம், உலகிலேயே மிகவும் குறைவான விலையில், அதிக வசதிகள் கொண்ட ஸ்மார்ட் போனை 251 ரூபாய்க்கு வழங்குவதாக அறிவிப்பு செய்தது.
கடந்த சில மாதங்களுக்கு முன், 'ஃப்ரீடம் 251' என்ற பெயரில் ஸ்மார்ட் போனை ரிங்கிங்பெல் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. உலக அளவில் முதல் மலிவு விலை ஸ்மார்ட் போன், என்ற பெருமையுடன் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்திய இப்போனை வாங்க ஏராளமானோர் ஆர்வம் காட்டினர். இதையடுத்து ஆன்லைன் மூலம் இந்த போனை பலர் புக்கிங் செய்தார்கள், பலர் புக்கிங் செய்ய முயற்சித்து ஏமாந்து போனார்கள்.
ஒரே நாளில் 7.5 கோடியை சம்பாதித்த அந்த நிறுவனத்தால், சொன்னது போல வாடிக்கையாளர்களுக்கு ஸ்மார்ட் போன்களை வழங்க இயலவில்லை.
இந்த நிலையில், ஜூன் 28ஆம் தேதி முதல் பிரீடம் 251 ஸ்மார்போன் விநியோகம் செய்யப்படும், என்று ரிங்கிங் பெல் நிறுவனத்தின் இயக்குநர் ரோஹித் கோயல் தெரிவித்தார். இதுவரை 7 கோடி பேர் கேஷ் ஆன் டெலிவரி வகையிலும், 30 ஆயிரம் பேர் பணம் கொடுத்தும் முன் பதிவு செய்துள்ள இந்த போன், முதல்கட்டமாக முன்பதிவு செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும், என்றும் அவர் தெரிவித்தார்.
ஆனால் சொன்னதுபோல செல்போனை பணம் கொடுத்து புக் செய்தவர்களுக்கு அனுப்ப முடியவில்லை. இதனிடையே ஜூலை 7ம் தேதிக்குள் (இன்றுக்குள்) முதற்கட்டமாக செல்போன் அனுப்ப முயற்றி செய்து வருவதாக ரோஹித் கோயல் கூறியுள்ளார்.
இந்த நிலையில் அதே ரிங்கிங்பெல் நிறுவனம், குறைந்த விலைக்கு எல்ஈடி டிவியை இன்று டெல்லியில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் பெயர் 'ஃப்ரீடம் ஹெச்டி எல்ஈடி டி.வி.' ஆகும். 32 இன்ச் கொண்ட இந்த டிவியின் விலை ரூ.9, 990 தான். சுமார் ஒரு லட்சம் டிவிகளை அது தயாரித்துள்ளதாம். அதுபோல் புதிய ரக ஸ்மார்ட் போன்களையும் ரிங்கிங்பெல் அறிமுப்படுத்துகிறது.
இது குறித்து ரிங்கிங்பெல் நிர்வாக இயக்குநர் மோகித் கோயல் கூறுகையில், " ஜூலை 25 ம் தேதி முதல் ஆன்லைனில் புக்கிங் தொடங்கும். ஆகஸ்ட் 1 ம் தேதி டெலிவரி செய்யப்படும்" என்று கூறியுள்ளார்.
இதை நம்பி எத்தனை பேர் பணம் கட்டப்போகிறார்களோ?