ஹலோ சார்.. செல்பி ரெம்ப பழைய்ய்யய டிரெண்ட்.. இப்போ ‘கவ்பி’தான் லேட்டஸ்ட், தெரியுமா?
கொல்கத்தா: பசுக்களை பாதுகாக்கவும், பசு வதையை தடுக்கவும், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பசுவுடன் செல்பி எடுக்கும் போட்டியை கொல்கத்தாவைச் சேர்ந்த தொண்டு நிறுவனம் ஒன்று நடத்தியுள்ளது.
மாட்டிறைச்சி விவகாரம் கடந்த ஆண்டு நாட்டில் பெரும் சர்ச்சைக்குரிய சம்பவங்களுக்கு காரணமாக அமைந்தது.
இந்நிலையில், வருங்காலத்தில் பசுக்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கவ்பி என்ற பெயரில் போட்டி ஒன்றை தொண்டு நிறுவனம் இணையத்தில் நடத்தியுள்ளது.
கவ்பி...
கொல்கத்தாவைச் சேர்ந்த 'கோ சேவா பரிவார்' என்றதொண்டு நிறுவனம் இந்த போட்டியை நடத்தியுள்ளது. இதற்கு 'பசுவுடன் செல்பி' எனப் பொருள் படும் வகையில் கவ்பி எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
பசுவுடன் செல்பி...
இதில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தங்களது செல்போனில் பசுக்களுடன் சேர்ந்து செல்பி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அவற்றை இணையம் வாயிலாக அந்த தொண்டு நிறுவனத்திற்கு அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப் பட்டது.
பேஸ்புக் பக்கத்தில்...
இவ்வாறு அனுப்பப்பட்ட புகைப்படங்களை அந்த தொண்டு நிறுவனம், தன் 'பேஸ்புக்' வலைத்தள பக்கத்தில், 'பசுவைபாதுகாப்போம், பசுவை வணங்குவோம்' என்ற பெயரில் வெளியிட்டு வருகிறது.
விதவிதமான கவ்பிக்கள்...
ஏற்கனவே செல்பி மோகம் தலை விரித்தாடும் நிலையில், இந்தப் போட்டியால் பசுவுக்கு முத்தம் கொடுப்பது போலவும், பசுவை வணங்குவது போலவும் என விதவிதமாக மக்கள் கவ்பி எடுத்து அனுப்பி வருகின்றனர்.
மருத்துவ குணம்...
பசு பாதுகாப்பு குறித்து சம்பந்தப்பட்ட தொண்டு நிறுவன நிர்வாகி ஒருவர் கூறுகையில், "பசு பாதுகாப்பு என்பது மதம் அல்லது அரசியல் சம்பந்தப்பட்டதல்ல. பசுவிடமிருந்து கிடைக்கும் அனைத்து பொருட்களும், மருத்துவ குணம் கொண்டவை.
விழிப்புணர்வு...
பசு இறைச்சியை சாப்பிடுவதால் கிடைக்கும் பலனை விட, அதனிடமிருந்து கிடைக்கும் பொருட்களால் அதிக பலன் கிடைக்கிறது என்ற விழிப்புணர்வை, மக்களிடம் ஏற்படுத்தவே இந்தப் போட்டியை நடத்தினோம்" எனத் தெரிவித்துள்ளார்.