டுவிட்டர் சர்ச்சையில் மீண்டும் சிக்கிய மெஹர் தரார்...
டெல்லி: சுனந்தா புஷ்கர் விவகாரத்தில் அடிபட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியவரான பாகிஸ்தான் பெண் நிருபர் மெஹர் தரார் இன்னொரு டுவிட்டர் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இந்த முறை அவர் காஷ்மீரை கையில் எடுத்துள்ளார்.
மத்திய அமைச்சர் சசிதரூரின் மனைவி சுனந்தா தரூர் கடந்த மாதம் 17ம் தேதி டெல்லியில் உள்ள ஒரு ஹோட்டலில் தற்கொலை செய்து கொண்டார். அதற்கு முன்பு சசி்க்கும், மெஹர்க்கும் இடையே கள்ளக்காதல் இருப்பதாக பரபரப்புத் தகவலை வெளியிட்டிருந்தார் சுனந்தா. இதுதொடர்பாக டிவிட்டரில் இருவருக்கும் இடையே கடும் மோதலும் மூண்டது. இதன் விளைவு- சுனந்தாவின் மரணம்.
இந்நிலையில் மெஹர் தரார் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள ஒரு கருத்தில், "இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளுக்குமே உண்மையைக் கையாளும் திறமை இல்லை. காஷ்மீர் என்ற பெயரில் இருவருமே வெற்றுக்கூச்சல் போடுகின்றனர். காஷ்மீரைப்பற்றி கவலைப்படுவதை விட்டுவிட்டு பாகிஸ்தான் முதலில் கராச்சி போன்ற நரகத்தில் வாடும் பகுதிகளை கவனிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
மேலும் இக்கருத்திற்கு விளக்கம் அளிக்கும் வகையில், "நான் பாகிஸ்தானை மிகுந்த அளவு நேசிக்கிறேன்.அந்த நேசமே அதன் தவறை சுட்டிக்காட்ட என்னை தூண்டுகிறது. நான் இன்று கூறியது காஷ்மீருக்காக அல்ல பாகிஸ்தானுக்காக" என்றும் கூறியுள்ளார்.
காஷ்மீர் பற்றிய பிரசாரத்தை பாகிஸ்தான் தீவிரமாக செய்து வரும் இந்நிலையில் மெஹர் தராரின் இக்கருத்துக்கு அந்த நாட்டில் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. இந்த சர்ச்சையின் மூலம் டுவிட்டரில் மெஹர் தராரின் பாலோயர்கள் 49,000 ஆக அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.