உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பின் இயல்பு நிலைக்கு திரும்பிய அயோத்தி
Recommended Video
அயோத்தி: சர்ச்சைக்குரிய நில உரிமை வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த போது அயோத்தி நகரம் வெறிச்சோடி காணப்பட்டது. தற்போது அயோத்தி நகரம் முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.
அயோத்தி நில உரிமை வழக்கில் நவம்பர் 9-ந் தேதி உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் தீர்ப்பளித்தது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும்; முஸ்லிம்கள் மசூதி கட்ட அயோத்தியில் வேறு ஒரு இடத்தில் 5 ஏக்கர் நிலம் ஒதுக்க வேண்டும் என்பது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு.
இத்தீர்ப்பு வழங்கப்பட்ட போது நாடு முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அயோத்தி நகரில் அனைத்து இடங்களிலும் பெருமளவு போலீசாரும் பாதுகாப்பு படை வீரர்களும் குவிக்கப்பட்டிருந்தனர்.
அங்கு கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியான போதும் கூட எந்த ஒரு சிறு அசம்பாவிதமும் நடைபெறவில்லை. அன்று மாலை சரயு நதிக்கரையில் வழக்கமாக நடைபெற்ற தீப ஆராதனை நிகழ்வும் சலசலப்பு ஏதுமின்றி அமைதியாக நடைபெற்றது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியான மறுநாள் பாதுகாப்பு கெடுபிடிகள் தளர்த்தப்பட்டன. இதனையடுத்து அயோத்தியில் கடைகள் திறக்கப்பட்டு சாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது. இருப்பினும் அயோத்தி நகரின் முக்கிய சில இடங்களில் போலீசார் இன்னமும் தடுப்புகளை அமைத்துள்ளனர்.
மேலும் வாகனங்கள் முழுமையாக சோதனையிடப்பட்டு அனுமதிக்கப்படுகின்றன. இன்று கார்த்திகை பூர்ணிமா என்பதால் பிற மாவட்டங்களில் இருந்தும் பெருமளவு பக்தர்கள் சரயு நதியில் புனித நீராட வருகை தருவர் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகளும் கண்காணிப்பு நடவடிக்கைகளும் அயோத்தியில் தொடருகின்றன.