கோவா திரைப்பட விழாவில் மத்திய அரசு அதிகாரி மீது மாணவி பாலியல் புகார்!!
பனாஜி: கோவாவில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவில் மத்திய அரசு உயர் அதிகாரி மீது டெல்லி மாணவி பாலியல் புகார் கூறி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கோவா தலைநகர் பனாஜியில் இந்திய சர்வதேச திரைப்பட விழா கடந்த 20-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திரைப்பட விழாவில் ஆசியாவின் ஆன்மா, உலக சினிமா பிரிவுகள் என்ற பிரிவில் பணியாற்றுவதற்காக டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தை சேர்ந்த 25 வயது மாணவி ஒருவர் சென்றார். அவர் மத்திய அரசின் தகவல், ஒலிபரப்புத்துறையில் துணை இயக்குனர் அளவில் உள்ள மூத்த அதிகாரி ஒருவரின் கீழ் பணியாற்றி வந்தார்.
மது அருந்திவிட்டு...
இந் நிலையில் கடந்த 16-ந் தேதி இரவில், கோவா பழைய மருத்துவக் கல்லூரியில் அமைந்துள்ள தமது அறைக்கு அந்த மாணவியை அதிகாரி அழைத்துப் பேசினார். அப்போது அவர் அந்த மாணவியிடம், ‘நாம் கொஞ்சம் மது அருந்தப் போகலாம். மது அருந்துவோம். அப்புறம் எல்லாம் செய்வோம் என பாலியல் ரீதியில் சூசகமாக கூறியுள்ளார்.
இதற்கு அந்த மாணவி உடன்படவில்லை. ஆனால் அந்த அதிகாரியோ மீண்டும் மீண்டும் அதே வார்த்தைகளைக் கூறி மாணவியை அழைத்து தொல்லை கொடுத்திருக்கிறார்.
ஆனால் மாணவி பிடிகொடுக்காமல் அங்கிருந்து தப்பி வந்து, இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் இயக்குனர் சங்கர் மோகனிடம் புகார் மனு அளித்தார். அதில் அவர் நடந்துள்ள சம்பவத்தை விளக்கி உள்ளார்.
அத்துடன் அந்த அதிகாரி திரைப்படவிழாவில் பணியில் ஈடுபட்டுள்ள பெண்களை தமது ரகசிய கண்காணிப்பு கேமரா மானிட்டரை வைத்து பார்த்து ரசிப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
விசாரணை கமிட்டி
புகாரைத் தொடர்ந்து அந்த மாணவி, இந்திய சர்வதேச திரைப்பட விழா பணியில் இருந்து விலகி விட்டார். இப் புகாரை பெற்றுக்கொண்ட இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் இயக்குனர் சங்கர் மோகன், புகார் குறித்து விசாரணை நடத்துவதற்காக நிருபமா கொட்ரு மற்றும் 2 பெண் அதிகாரிகள் கொண்ட குழு ஒன்றை அமைத்துள்ளார்.
இது தொடர்பாக பாதிப்புக்குள்ளான மாணவி கூறுகையில், ‘இந்த கமிட்டியின் முன்பாக என்னை ஆஜராகி வாக்குமூலம் அளிக்க கூறினர். நானும் ஆஜராகி என்ன நடந்தது என்பதை கூறினேன். சர்ச்சைக்குரிய அந்த அதிகாரி கமிட்டியின் முன்பு ஆஜராகி வருத்தம் தெரிவித்தார். ஆனால் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்கவில்லை.
இதையடுத்து இந்த விவகாரம் முடிவுக்கு வந்து விட்டதாகவும், சில பரிந்துரைகள் செய்திருப்பதாகவும் கமிட்டியினர் கூறினர் என தெரிவித்தார்.
இதே பனாஜியில் டெஹல்கா\ பத்திரிகை ஆசிரியர் தருண் தேஜ்பால் மீது, பெண் பத்திரிகையாளர் பாலியல் புகார் கூறி, ஏற்படுத்திய பரபரப்பு அடங்குவதற்குள் அடுத்த பாலியல் புகார் எழுந்துள்ளது பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.