20 நாட்கள் சிகிச்சைக்குப் பின்... மருத்துவமனையில் இருந்து சுஷ்மா டிஸ்சார்ஜ்
டெல்லி: நெஞ்சுவலி காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார்.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு கடந்தமாதம் 25ம் தேதி திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவர் சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடனடியாக அவருக்கு சிறப்பு நிபுணர்கள் பல்வேறு சோதனைகளை எடுத்தனர்.
அப்போது, அவருக்கு நெஞ்சு எரிச்சலுடன், நிமோனியா காய்ச்சலுக்கான அறிகுறியும் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சுஷ்மா சுவராஜ் இதய நரம்பியல் சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
தொடர்ந்து 20 நாட்களாக சுஷ்மாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதன்பலனாக சுஷ்மாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.
இந்நிலையில், சுஷ்மா பூரணமாக குணமடைந்ததை அடுத்து, இன்று அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சுஷ்மாவை பிரதமர் மோடி, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் ஆகியோர் சந்தித்து நலம் விசாரித்தது குறிப்பிடத்தக்கது.