டிரம்ப் -இம்ரான் சந்திப்புக்கு பிறகே காஷ்மீரில் இவ்வளவு மாற்றங்கள்... அதிகரித்த பதற்றங்கள்
Recommended Video
ஸ்ரீநகர்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்தித்து பேசினார். அதன்பிறகு தான் ஜம்மு காஷ்மீரில் இப்படி ஒரு மாற்றங்களும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது.
இந்தியா பாகிஸ்தான் இடையே ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் 70 ஆண்டுகளாக பிரச்சனை நீடித்து வருகிறது. பெரிய அண்ணன் அல்லது நாட்டமை மனோபாவத்தில் இருக்கும் அமெரிக்கா இந்த பிரச்சனையில் இருநாடுகளுக்கும் இடையே சமரசம் செய்வதாக அடிக்கடி சொல்லி வருகிறது.
அப்படித்தான் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை கடந்த வாரம் சந்தித்து பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப் சமரசம் செய்ய தயார் என அறிவித்தார்.அப்போது டிரம்ப் பேசியதுதான் அதிர்ச்சி ரகம். காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்து வைக்குமாறு பிரதமர் மோடி என்னிடம் கேட்டுக்கொண்டார் என டிரம்ப் பேசினார். இந்த விவகாரம் இந்தியாவில் பெரும் புயலை கிளப்பியது.
பாக் ராணுவம் ஊடுருவல்
ஆனால் டிரம்ப் கூறியது போல் காஷ்மீர் தொடர்பாக எந்த கோரிக்கையும் பிரதமர் மோடி வைக்கவில்லை என மத்திய அரசு திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தது. அதன்பின்னர் காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடுருவல்கள் அதிகரித்தன.
7 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க மிகப்பெரிய சதி நடப்பதாக கூறி யாத்திரையை மத்திய அரசு ரத்து செய்தது. யாத்திரைக்கு வந்தவர்கள் உள்பட அனைத்து வெளிமாநிலத்தவரையும் காஷ்மீரை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டது. நேற்று முன்தினம் காஷ்மீரில் 7 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். கூடுதலாக பாதுகாப்பு படை வீரர்கள் சுமார் 35 ஆயிரம் பேர் காஷ்மீரில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக குவிக்கப்பட்டுள்ளனர்.
அலைமோதும் கூட்டம்
பல ஆயிரம் வெளிமாநிலத்தவர்கள் காஷ்மீரை விட்டு வேகவேகமாக வெளியேறி வருகிறார்கள். காஷ்மீரில் தங்கி படிக்கும் வெளிமாநிலத்தவரும் வெளியேறி வருகிறார்கள். இதனால் காஷ்மீரில் ரயில் மற்றும் விமான நிலையங்களில் கூட்டம் அலைமோதுகிறது.
பிரதமர் மோடி முக்கிய முடிவு
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி முக்கிய முடிவினை எடுக்கப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுமோ என்ற பீதி காஷ்மீரில் நிலவுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீர் மாநிலத்தில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர்கள் ஒமர் அப்துல்லா , மெகபூபா முஃப்தி உள்பட முக்கிய அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.