உ.பி.-ஐ தொடர்ந்து மத்திய பிரதேசத்திலும் லவ் ஜிகாத் சட்டம்... 10 ஆண்டுகள் சிறை, ரூ. 1 லட்சம் அபராதம்
இந்தூர்: கட்டாய மத மாற்றங்களைத் தடுக்கும் வகையிலான புதிய மசோதாவுக்கு மத்தியப் பிரதேச அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் இந்த மாத இறுதியில் சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது. இந்நிலையில், அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தர்ம ஸ்வதந்த்ரியா (மத சுதந்திரம்) மசோதா 2020 எனப்படும் கட்டாய மதமாற்றத் தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
வரும் சட்டமன்றக் கூட்டத் தொடரில் இந்த மசோதா நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சட்டத்தின் மூலம் குற்றஞ்சாட்டப்படும் ஒருவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் ஒரு லட்ச ரூபாய் வரை அபராதமும் விதிக்க முடியும்.
இந்தச் சட்டம் குறித்து மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கூறுகையில், "இது மசோதாவை அரசியல் கோணத்தில் பார்க்கத் தேவையில்லை. சிலர் செய்யும் குற்றங்களைத் தடுக்கவே இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பல சிறுமிகளைச் சமீபத்தில் நாங்கள் பல்வேறு இடங்களிலிருந்து மீட்டு வந்தோம். மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த அப்பாவி சிறுமிகளுக்கு இதுபோன்ற சம்பவங்கள் நடக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம்" என்றார்.
புதிய மசோதாவின் கீழ், ஒருவர் மீது மத மாற்றத்தைக் கட்டாயப்படுத்தினால் அவருக்கு 1-5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், குறைந்தபட்சம் ₹ 25,000 அபராதமும் விதிக்கப்படும் என்று மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தெரிவித்தார். மேலும், பாதிக்கப்படும் நபர் பட்டியல் சாதி அல்லது பழங்குடியினத்தைச் சேர்ந்தவராகவோ அல்லது மைனராகவோ இருந்தால், குற்றவாளிக்குக் குறைந்தபட்சம் 2-10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்றார்.
சுயவிருப்பத்தின் பேரில் தங்களின் மதத்தை மாற்றுவோர் இது குறித்து இரண்டு மாதங்களுக்கு முன்னரே அறிவிக்க வேண்டும். அவ்வாறு அறிவிக்கத் தவறினால் மதமாற்றம் செல்லுபடியாகாது.
உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் அரசு சமீபத்தில்தான் இதேபோன்ற லவ் ஜிகாத் சட்டத்தை அமல்படுத்தியிருந்தது. இருப்பினும், இந்தச் சட்டம் பலரால் தொடர்ந்து துஷ்பிரயோகம் செய்யப்படுவதாகவும் அப்பாவி இளைஞர்கள் கைது செய்யப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.