பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறும் நிதிஷ்.... ஓராண்டுக்கு பின் மீண்டும் லாலுவுடன் இணைய விருப்பம்
பாஜக கூட்டணியிலிருந்து நிதிஷ்குமார் வெளியேறவுள்ளார். அவர் மீண்டும் மகா கூட்டணியில் இணையவுள்ளார்.
Recommended Video
பாட்னா: ஓராண்டுக்கு பிறகு மீண்டும் உருவாகிறது மகா கூட்டணி. பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொண்டு மீண்டும் லாலுவுடன் இணைய விரும்புகிறார்.
கடந்த 2015-ஆம் ஆண்டு பீகாரில் நடைபெற்ற சட்டசபை தேர்தலின் போது காங்கிரஸ், ஜேடியு, ஆர்ஜேடி ஆகிய கட்சிகள் மகா கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. இதையடுத்து நிதிஷ்குமார் முதல்வராகவும் லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராகவும் பதவியேற்றனர்.
இந்நிலையில் கடந்த 2017-ஆம் ஆண்டு மாட்டுத் தீவன வழக்கில் லாலு, அவரது மகனும் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து தேஜஸ்வியை பதவியிலிருந்து விலகுமாறு நிதிஷ் வலியுறுத்தினார். அதற்கு அவர் மறுத்தார்.
பாஜக ஆதரவு
இதையடுத்து முதல்வர் பதவியை நிதிஷ் தூக்கி எறிந்தார். பின்னர் பாஜக ஆதரவு கரம் நீட்டியவுடன் மீண்டும் முதல்வராக பதவியேற்றார் நிதிஷ். துணை முதல்வர் பதவி பாஜகவுக்கு வழங்கப்பட்டது.
கூட்டணி முறிவு
இந்நிலையில் பாஜகவுக்கும் ஜேடியு கட்சிக்கும் இடையே உள்ள உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. கடந்த ஜூன் 21-ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் கலந்து கொண்டன. ஆனால் நிதிஷ்குமார் கலந்து கொள்ளவில்லை.
கூட்டணி விலகல்
கடந்த சில வாரங்களுக்கு முன்பு பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து குறித்து நிதிஷ் பேசினார். அதோடு அஸ்ஸாமின் குடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மோடியின் பணமதிப்பிழப்பு விவகாரம் குறித்தும் பேசியிருந்தார். இதனால் பாஜகவுடன் கருத்து வேறுபாடு நிலவி வருவதால் விரைவில் நிதிஷ்குமார் பாஜகவுடன் கூட்டணியிலிருந்து விலகுவதை அறிவிப்பார் என்றே தெரிகிறது.
தேஜஸ்விக்கு விருப்பமில்லை
இதையடுத்து தேர்தலின்போது தொடங்கப்பட்ட மகா கூட்டணியில் இணைய வாய்ப்பிருக்கிறது. லாலு, ஷரத் யாதவ் , காங்கிரஸ் ஆகியோருடன் இணைய நிதிஷுக்கு விருப்பம் உள்ளது. ஆனால் இதில் தேஜஸ்விக்கு உடன்பாடு இல்லை. மீண்டும் இக்கூட்டணி உருவாகக் கூடாது என்று நினைக்கிறார்.
காங்கிரஸ் கருத்து
இதுகுறித்து காங்கிரஸ் கட்சி கூறுகையில் எங்களை பொருத்தவரை நிதிஷை காட்டிலும் லாலு யாதவ்தான் முக்கியம். நிதிஷை விட அவர் நம்பிக்கைக்குரியவர். மகா கூட்டணியை மீண்டும் ஏற்படுத்த லாலு விரும்பினால் நாங்கள் இணைவோம். இல்லாவிட்டால் நிதிஷ் சிறிது காலம் காத்திருக்க வேண்டும் என்று மூத்த தலைவர் கூறியுள்ளார்.