நாடாளுமன்ற தாக்குதலில் அப்சல் குருவுக்கு தொடர்பு இருக்குமா?.. ப.சி.க்கு இப்போது வந்த சந்தேகம்
டெல்லி: நாடாளுமன்றத்தின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சதியில் தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவுக்கு தொடர்பு இருக்குமா என்பது சந்தேகமே என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றம் மீது 2001-ஆம் ஆண்டு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதல் தொடர்புடைய அப்சல் குரு கைது செய்யப்பட்டு 2013-ம் ஆண்டு தூக்கிலிடப்பட்டார். அப்போது நிதி அமைச்சராக இருந்தவர் ப.சிதம்பரம். அதற்கு முன்னதாக 2008ஆம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு உள்துறை அமைச்சராக இருந்தார் ப.சிதம்பரம்.
தற்போது டெல்லி ஜஹவர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்கள் அப்சல் குருவுக்கு ஆதரவாக நிகழ்ச்சி நடத்திய விவகாரம் வெடித்திருக்கும் நிலையில் எக்கனாமிக் டைம்ஸ் நாளேட்டுக்கு ப.சிதம்பரம் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், நாடாளுமன்றத் தாக்குதலில் அப்சல் குருவுக்கு தொடர்பிருக்குமா? என்ற சந்தேகத்தை அவர் எழுப்பியுள்ளார்.
இது குறித்து சிதம்பரம் கூறுகையில், அப்சல் குருவுக்கு நாடாளுமன்றத் தாக்குதல் சதியில் தொடர்பிருக்குமா என்ற சந்தேகம் தனிப்பட்ட முறையில் எனக்கு இருக்கிறது. அப்படியே தொடர்பிருந்தாலும் அவரது பங்கு எந்த அளவுக்கு என்பது குறித்தும் சந்தேகம் உள்ளது.
அப்சல் குருவை தூக்கிலிட்ட போது அமைச்சரவையில்தான் இருந்தேன். ஆனால் உள்துறை அமைச்சராக அல்ல... நான் நினைப்பதெல்லாம் சொல்லிவிட முடியாது. நீங்கள் அந்த நாற்காலியில் உட்கார்ந்தாலும் அந்த முடிவைத்தான் எடுப்பீர்கள்
அரசாங்கத்தில் இருந்து கொண்டு நீதிமன்றம் தவறாக முடிவெடுத்துவிட்டது என்று சொல்லவும் முடியாது. ஏனெனில் அரசுதான் வழக்கை நடத்தியது. அப்படி அப்சல் குருவுக்கு சதியில் தொடர்பு இருந்தாலும் பரோல் இல்லாத வாழ்நாள் ஆயுள் தண்டனை கொடுத்திருக்கலாம் என்றார்.
மேலும் ஜஹவர்லால் நேரு பல்கலைக் கழக மாணவரக்ள் மீது தேசதுரோக வழக்கு தொடர்ந்திருப்பது மூர்க்கத்தனமான நடவடிக்கை; நீதிமன்றம் முதல் கட்ட விசாரணையிலேயே தேசதுரோக பிரிவுகளை ரத்து செய்யும் என்றும் ப.சிதம்பரம் நம்பிக்கை தெரிவித்தார்.