அரசியல் காரணங்களுக்காக அப்சல் குருவைத் தூக்கிலிட்டது காங். அரசு - உமர் அப்துல்லா
டெல்லி: முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, அரசியல் காரணங்களுக்காகவே அப்சல் குருவைத் தூக்கிலிட்டது என்று தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் உமர் அப்துல்லா கூறியுள்ளார்.
அப்சல் குருவை தூக்கில் போடப் போவது குறித்து சில மணி நேரங்களுக்கு முன்புதான் அப்போது முதல்வராக இருந்த எனக்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தெரிவித்தது என்று கூறியுள்ளார் உமர் அப்துல்லா.
இதுகுறித்து அவர் கூறுகையில், நான் அப்போது எனது சகோதரியுடன் டெல்லியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இரவு சாப்பாடு சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அப்போது உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேவிடமிருந்து எனக்குப் போன் வந்தது. அப்சல் குருவைத் தூக்கிலிடுவது தொடர்பான ஆவணத்தில் தான் கையெழுத்திட்டு விட்டதாகவும், அடுத்த நாள் அதிகாலையில் அவர் தூக்கிலிடப்படவுள்ளதாகவும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கைக் காக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் என்னை அவர் கேட்டுக் கொண்டார்.
அப்போதும் கூட நான், இதை நிறுத்த எதுவும் செய்ய முடியாதா என்று கேட்டேன். அதற்கு அவர் நான் கையெழுத்துப் போட்டு விட்டேன். வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு விட்டது. இதன் விளைவுகளை சமாளிக்கத் தயாராகுங்கள் என்று மட்டும் எனக்குப் பதிலளித்தார்.
ஆனால் ராஜீவ் காந்தி, பியாந்த் சிங் வழக்குகளில் கொலையாளிகள் விவகாரத்தில் காங்கிரஸ் அரசு மாறுபட்டு நடந்து கொண்டது. நமக்குப் பிடிக்கிறதோ, இல்லையோ, அப்சல் குரு அரசியல் காரணங்களுக்காக தூக்கிலிடப்பட்டார். அதுதான் உண்மை என்றார் உமர் அப்துல்லா.