கம்தாபூர் தனி மாநிலம் கோரி மறியல்- வடகிழக்கு ரயில் சேவைகள் கடும் பாதிப்பு!
கம்தாபூர் தனி மாநிலம் கோரி நடைபெற்ற மறியலால் வடகிழக்கு மாநில ரயில் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
சிலிகுரி: மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாமின் சில பகுதிகளை இணைத்து கம்தாபூர் தனி மாநிலம் கோரி நேற்று நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தால் வடகிழக்கு மாநில பயணிகள் கடுமையாக பாதிப்புக்குள்ளாகினர்.
மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பல இனக்குழுக்கள் தனி மாநிலம் கோரியும் தனிநாடு கோரியும் போராடி வருகின்றன. தனிநாடு கோரி ஆயுதமேந்தி போராடிய அமைப்புகள் தடை செய்யப்பட்டுள்ளன.
கூர்க்காலாந்து
டார்ஜிலிங, சிலிகுரி உள்ளிட்ட பகுதிகளை இணைத்து கூர்க்காலாந்து தனி மாநிலம் கோரி 20 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடைபெற்று வருகிறது. கூர்க்காலாந்து போராட்டமானது வடகிழக்கு மாநிலங்களில் பல தனி மாநிலம் கோரும் இயக்கங்களை மீண்டும் போராட வைத்துள்ளது.
கம்தாபூர்
டார்ஜிலிங், மால்டா, ஜல்பைகுரி, கூச்பிகார், வடக்கு மற்றும் தெற்கு தினாஜ்பூர், அஸ்ஸாமின் கோக்ராஜர், போங்கைகோன், துப்ரி ஆகிய பகுதிகளை இணைத்து கம்தாபூர் தனி மாநிலம் அமைக்க கோரி அனைத்து அஸ்ஸாம் கூச் ராஜ்பங்கோஸி மாணவர் அமைப்பு 12 மணிநேர ரயில் மறியலுக்கு அழைப்பு விடுத்தது. இந்த மறியலால் ரயில் சேவைகள் மாற்றியமைக்கப்பட்டன.
திப்ராலாந்து
அதேபோல் திரிபுராவில் திப்ராலாந்து தனி மாநிலம் கோரியும் ரயில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது. இந்த போராட்டங்களால் வடகிழக்கு மாநில ரயில் பயணிகள் நேற்று கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
தடை செய்யப்பட்ட இயக்கங்கள்
கத்மாபூர் தனி நாடு கோரி ஆயுதமேந்தி போராடும் கம்தாபூர் விடுதலை இயக்கம் மத்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த அமைப்புக்கு அஸ்ஸாம் தனிநாடு கோரும் உல்பா அமைப்புதான் பயிற்சி கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.