ஆக்ராவில் சர்ச்சுக்குள் புகுந்து மேரி மாதா சிலையை சேதப்படுத்திய விஷமிகள்
ஆக்ரா: உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள தேவாலயத்தை யாரோ தாக்கி அங்கருந்த அன்னை மேரியின் சிலைகளை சேதப்படுத்தி அதை அவமதித்துள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவின் பிரதாப்பூரா பகுதியில் புனித மேரி தேவாலயம் உள்ளது. அந்த தேவாலயத்திற்குள் வியாழக்கிழமை அதிகாலை புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த 2 சிலைகளை உடைத்துள்ளனர். அன்னை மேரியின் சிலையை அது இருந்த இடத்தில் இருந்து பெயர்த்துள்ளனர். மேரி மாதா சிலையின் கையில் குழந்தை யேசுவின் தலையை வைத்துள்ளனர். மேலும் மேரி மாதாவின் சிலைகளில் ஒன்றின் கழுத்தில் நாய்ச் சங்கிலியை சுற்றி வைத்துள்ளனர்.
இது குறித்து தேவாலயத்தில் பணிபுரியும் பாதிரியார் மூன் லசாரஸ் கூறுகையில்,
மர்ம நபர்கள் எங்கள் மத நம்பிக்கையை காயப்படுத்தும் வகையில் இவ்வாறு செய்துள்ளனர். அவர்கள் தேவாலய ஜன்னல்களின் கண்ணாடியையும் அடித்து நொறுக்கியுள்ளனர். அதிகாலை 3.30 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது. தேவாலய வளாகத்தில் நின்ற காரை மர்ம நபர்கள் சேதப்படுத்தியபோது அதன் அலாரம் சப்தம் கேட்டு நான் கண்விழித்து ஓடி வந்தேன். அதற்குள் அவர்கள் தப்பியோடிவிட்டனர் என்றார்.
இந்த சம்பவத்தை கண்டித்து கிறிஸ்தவ மக்கள் வியாழக்கிழமை மாலை ஆக்ராவில் கண்டன பேரணி நடத்தினர்.