உத்தரப்பிரதேசம்... கடனை அடைக்கலை... 34 பயணிகளுடன் பஸ்ஸை கடத்திய நிதி நிறுவனம்!!
ஆக்ரா: உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் பஸ் வாங்குவதற்காக வாங்கி இருந்த கடனை திருப்பி செலுத்தாத காரணத்தால், 34 பயணிகள் பஸ்ஸில் அமர்ந்து இருக்கும்போது கடன் கொடுத்த நிதி நிறுவனம் பஸ்ஸை கடத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரியானாவின் குர்காவனில் இருந்து மத்தியப்பிரதேசத்தில் இருக்கும் குவாலியருக்கு இந்த பஸ் இன்று காலை சென்று கொண்டு இருந்தது. அப்போது, மல்பூரா போலீஸ் நிலைய எல்லைக்குள் சென்று கொண்டு இருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.
தற்போது கிடைத்து இருக்கும் தகவலின்படி, ஆக்ரா அருகே இருக்கும் ராய்காட் சோதனை சாவடியை கடந்தவுடன் சிலர் பஸ்ஸை நிறுத்தியுள்ளனர். பின்னர் அந்த பஸ்ஸை சிறை பிடித்துள்ளனர். அப்போது 34 பயணிகள் பஸ்ஸூக்குள் இருந்துள்ளனர். இவர்களில் மூவர் பஸ்ஸில் இருந்து இறங்கி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதுகுறித்து ஆக்ரா போலீஸ் எஸ்எஸ்பி பாபுலு சிங் கூறுகையில், ''பஸ்ஸில் பயணம் செய்தவர்களில் மூவர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரில், குர்காவனில் இருந்து பன்னாவுக்கு பஸ்ஸில் சென்று கொண்டு இருக்கும்போது சிலர் பஸ்ஸை சிறை பிடித்தனர். அவர்கள் பஸ் வாங்குவதற்கு கடன் கொடுத்த நிதி நிறுவனத்தினர் என்று தெரிவித்து இருந்தனர். இதையடுத்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குளுகுளு ஊட்டியில்... அனல் பறந்த திமுக ஆய்வுக் கூட்டம்... வாடிய முபாரக் முகம்... தேற்றிய கே.என்.நேரு
முதல் கட்ட விசாரணையில் பஸ் வாங்குவதற்கு கடன் பெற்றவர், கடனை திருப்பிச் செலுத்தாத காரணத்தால், பஸ்ஸை நிதி நிறுவனத்தினர் எடுத்துச் சென்றுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து மேலும், விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பஸ்ஸில் சென்ற பயணிகள் நலமாக உள்ளனர்'' என்றார்.
ஆக்ரா பஸ் குறித்து கருத்துத் தெரிவித்து இருக்கும் கூடுதல் தலைமை செயலாளர் அவனிஷ் அவஸ்தி கூறுகையில், ''ஓட்டுநர், நடத்துனர் இருவர் உள்பட பஸ்ஸில் சென்ற அனைத்து பயணிகளும் பத்திரமாக உள்ளனர். பஸ் முதலாளி நேற்று உயிரிழந்து இருக்கிறார்'' என்று தெரிவித்துள்ளார்.