காவிரி நடுவர் மன்ற தீர்ப்பால் விவசாயம் பாதிப்பு.. சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு வாதம்
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
டெல்லி: ஆண்டுக்கு 400 டிஎம்சி நீர் கிடைக்க வேண்டிய நிலையில் 230 டிஎம்சிதான் கிடைக்கிறது என கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளது.
கடந்த 2007ஆம் ஆண்டு காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பிற்கு எதிராக, தமிழகம், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தன. இந்த வழக்கு பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கின் இறுதி விசாரணை 11ம் தேதி முதல் தினசரி நடந்து வருகிறது. அந்த வகையில் இன்றும் வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது, கர்நாடக தரப்பில் வாதிடுகையில், காவிரி நடுவர் மன்ற தீர்ப்பால் கர்நாடக மாநிலத்தில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது.
மேலும், ஆண்டுக்கு 400 டிஎம்சி நீர் கிடைக்க வேண்டிய நிலையில் வெறும் 230 டிஎம்சி நீர்தான் கிடைக்கிறது என்றும் உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
நேற்று நடைபெற்ற விசாரணையின் போதும், ஒப்பந்தத்தில் உள்ள அளவை விட, சாகுபடி பகுதிகளை தமிழக அரசு அதிகரித்துள்ளது என்றும், ஒப்பந்தத்தை மீறி தொடர்ந்து செயல்பட்டு வருவது தமிழக அரசு தான் என்று கர்நாடக அரசு குற்றம்சாட்டியது. இதற்கு மாநிலங்கள் அனைத்தும் நாட்டின் அங்கம்தான் என்ற நீதிபதிகள் கூறியது குறிப்பிடத்தக்கது.