விவசாயிகள் தற்கொலைக்கு காதல் தோல்வியே காரணம்... எழுதிக் கொடுத்து வம்பில் மாட்டிய மத்திய அமைச்சர்
டெல்லி : காதல் தோல்வி, ஆண்மையின்மை உள்ளிட்ட காரணங்களால் தான் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதாக மத்திய வேளாண் அமைச்சர் ராதா மோகன் சிங் கூறியுள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றிற்கு எழுத்து மூலம் அவர் அளித்த பதிலே இந்த சர்ச்சைக்கு காரணமாகியுள்ளது.
ஏற்கனவே நிலம் கையகப்படுத்தும் மசோதா விவகாரத்தில் பா.ஜ.க. அரசு மீது கடும் அதிருப்தி கொண்டிருக்கும் விவசாயிகளிடையே அமைச்சரின் இந்த கருத்து கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் ராதா மோகன் சிங்கின் கருத்தை எதிர்கட்சிகள் வன்மையாக கண்டித்துள்ளனர். அமைச்சர் தனது பதிலில் போதை பழக்கம், காதல் விவகாரம், ஆண்மையின்மை, குழந்தையில்லாத ஏக்கம், வரதட்சணை விவகாரம், உடல்நல கோளாறு மற்றும் குடும்ப தகராறுகளாலேயே 1400-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக கூறியிருந்தார்.
தேசிய குற்றவியல் பதிவேட்டில் இந்த தகவல்கள் உள்ளதாக அவர் தெரிவித்திருந்தார். விவசாயிகளின் தற்கொலைக்கு இவ்வாறு காரணங்களை அடுக்கி இருந்த அமைச்சர் ராதா மோகன் சிங் போனால் போகட்டும் என்று கடனும் ஒரு காரணம் என்று தெரிவித்திருந்தார்.