நான் ரெடி.. நீங்க ரெடியா... இத்தாலி ஹெலிகாப்டர் பேரத்தின் இடைத்தரகர் சிபிஜக்கு கடிதம்
டெல்லி: அகஸ்டா வெஸ்ட்லேண்ட் பேரத்தில் இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் ஜேம்ஸ் மைக்கல் இந்திய போலீஸ் அதிகாரிகளை சந்தித்து பேச தயாராக உள்ளதாக கடிதம் ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.
கடந்த 2010ம் ஆண்டு இத்தாலி நாட்டில் இருந்து அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து 3 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பில் 12 நவீன ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கான ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டது. பின்னர் அந்த ஒப்பந்தம் 2013ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. இந்தப் ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக இந்தியாவில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களிடம் 10 சதவீத கமிஷன் என்ற அளவில் சுமார் 370 கோடி ரூபாய் லஞ்சமாக கைமாறியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனையடுத்து, இந்த ஊழல் தொடர்பாக அகஸ்டா வெஸ்ட்லேண்டின் தாய் நிறுவனமான பின்மெக்கானிக்காவின் தலைவர் குயூஸ்பே ஓர்சி, முன்னாள் முதன்மைச் செயல் அதிகாரி புரூனோ பக்னோலினி ஆகியோரிடம் சிபிஐ விசாரணை நடத்தியுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் இடைத்தரகராக செயல்பட்ட இங்கிலாந்தைச் சேர்ந்த கிறிஸ்டியன் மைக்கலிடம் விசாரணை மேற்கொள்ள சிபிஐ முடிவு செய்தது.
அதன் அடிப்படையில், பிரிட்டனில் உள்ள கிறிஸ்டியன் மைக்கலை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பிரிட்டன் அரசுக்கு மத்திய அரசு கோரிக்கை வைத்திருந்தது.
இந்நிலையில், இந்திய விசாரணை அதிகாரிகளை சந்திக்க தயாராக இருப்பதாக இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கல் சிபிஐக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். ஆகஸ்டு 25 என்று தேதியிடப்பட்ட அந்தக் கடிதத்தில் இந்திய விசாரணை அதிகாரிகளை துபாயில் சந்திக்க தயாராக இருப்பதாகவும், விசாரணை நடைபெற்றால் தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட ரெட் கார்னர் நோட்டீசை திரும்ப பெற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், தான் குற்றமற்றவர் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
அகஸ்டா வெஸ்ட்லேண்ட் விவகாரத்தில் கிறிஸ்டியன் ஜேம்ஸ் மைக்கலுக்கு எதிராக ஜாமீனில் வெளி வர முடியாத பிடிவாரண்டை இந்திய நீதிமன்றங்கள் பிறப்பித்துள்ளது. இதனால் இந்தியா வந்தால் கைது செய்யப்படலாம் என்ற அச்சம் கிறிஸ்டியன் மைக்கலுக்கு இருப்பதால் விசாரணையை துபாய்யில் வைத்துக் கொள்ள கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.