ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு.. முன்னாள் விமானப்படை தளபதி தியாகிக்கு மேலும் 3 நாள் காவல்
டெல்லி: அக்ஸ்டா வெஸ்ட்லாண்ட் ஹெலிகாப்டர் முறைகேடு வழக்கில், முன்னாள் விமானப்படை தளபதி எஸ்.பி.தியாகியின் சிபிஐ காவல் மேலும் 3 நாட்களூக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு காலத்தில், வி.ஐ.பிகளுக்கு ஹெலிகாப்டர்கள் வாங்கியபோது நடந்த முறைகேட்டில் அப்போது விமானப்படை தளபதியாக இருந்த தியாகி பெயர் எப்.ஐ.ஆரில் சேர்க்கப்பட்டது. 2013ல் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்ட நிலையில், கடந்த சனிக்கிழமை, தியாகி, கவுதம் கைதான் மற்றும் சஞ்சிவ் தியாகி ஆகியோர் சிபிஐயால் கைது செய்யப்பட்டு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். டிசம்பர் 14ம்தேதியான இன்று வரை அவர்களுக்கு காவல் விதித்திருந்தது கோர்ட்.
கோர்ட் குறிப்பிட்ட தேதி முடிந்த நிலையில் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தியாகி உள்ளிட்டோருக்கு மேலும் 3 நாட்கள் காவல் விதித்துள்ளது நீதிமன்றம். பண மதிப்பிழப்பு பிரச்சினையை திசை திருப்ப தியாகி இப்போது கைது செய்யப்பட்டதாகவும், மூன்றாந்தர விசாரணையை நடத்த சிபிஐ திட்டமிட்டுள்ளதாகவும் தியாகி தரப்பு வழக்கறிஞர் வாதிட்டத்தை நீதிமன்றம் ஏற்கவில்லை.