விஸ்வரூபமெடுக்கும் ஹெலிகாப்டர் ஊழல் விசாரணை- கதிகலங்கும் பெருந்தலைகள்
டெல்லி: பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள ஹெலிகாப்டர் ஊழல் வழக்கின் விசாரணையை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. பாதுகாப்புத் துறையின் விவகாரங்களில் பேரம் பேசியதாக கருதப்படும் பல்வேறு நிறுவனங்கள் இந்த வழக்கில் விசாரணை வளையத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. குறிப்பாக பணத்தொடர்புகள் குறித்து விசாரித்து வரும் அமலாக்கத்துறை இடைத்தரகர்கள் உள்ளிட்டோரின் தொடர்புகள் குறித்தும் விசாரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் பல அரசியல் தலைவர்கள் கதிகலங்கிப் போயுள்ளனர்.
இத்தாலியில் இருந்து இந்தியாவின் விவிஐபிகளுக்காக ஹெலிகாப்டர்கள் வாங்கியதில் ஊழல் நடந்திருக்கும் விவகாரம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்த விவகாரத்தில் நாடாளுமன்றத்தை காங்கிரஸ் கட்சி முடக்கியது.
இதற்கு பதிலடியாக மத்திய அரசு, ஹெலிகாப்டர் ஊழல் வழக்கின் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளது. வருமான வரித்துறை மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி ஆகியவற்றின் உதவியை நாடியுள்ள அமலாக்கத்துறை அவர்களிடமிருந்தும் தகவல்கள் கிடைக்கும் என நம்புகிறது. இதில் அதோடு வருமான வரித்துறை நடத்திய ரெய்டில் சிக்கிய பல முக்கிய ஆவணங்களும் கிடைக்கும் எனவும் அமலாக்கத்துறை எதிர்பார்க்கிறது.
விசாரணை வளையத்தில் வியாபாரிகள்
பாதுகாப்பு தொடர்பான தயாரிப்புகளை கையாண்டு வந்த நிறுவனங்களை அடையாளம் கண்டுள்ள அமலாக்கத்துறை இந்த வழக்கோடு தொடர்புடைய கன்சல்டன்சி நிறுவனம் ஒன்றையும் விசாரணை வளையத்தினுள் கொண்டு வந்துள்ளது. பல வழக்குகளில் இந்த கன்சல்டன்சி நிறுவனம் இடைத்தரகராக செயல்பட்டு வந்தது தெரியவந்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு தொடர்பான தயாரிப்புகளை கொள்முதல் செய்வதில் இந்த கன்சல்டன்சி நிறுவனங்களின் பங்கு என்ன என்பதை குறித்து விசாரணையில் இது போன்ற கன்சல்டன்சி நிறுவனங்கள் கருப்பு பணத்தை சட்டபூர்வமான பணமாக மாற்றும் பணச் சலவைக்காகவே ஏற்படுத்தப் படுகிறது என்றும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது
இத்தாலி நீதிமன்றம் இடைத்தரகர்களை விசாரித்தபோது கன்சல்டன்சி நிறுவனத்திற்கான ஆலோசனைக் கட்டணம் பெற்றுக்கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர். இருப்பினும் விசாரணை வேறு விதமாக பல்வேறு விசயங்களை தெரிவிக்கின்றது.
பணப் பரிமாற்றம் செய்வதற்காகவே இந்த அமைப்புகளை குடோ ஹாஸ்க் மற்றும் ஜேம்ஸ் கிறிஸ்டியன் மைக்கேல் ஆகியோர் ஏற்படுத்தியது தெளிவாகிறது. இடைத்தரகர்களான இவர்கள் ஒப்பந்தங்கள் தங்களுக்கு ஆதரவாக இருக்கும் வகையில் ஏற்பாடு செய்ய இந்தியாவில் உள்ள பல்வேறு முக்கியப் பிரமுகர்களுடன் தொடர்பிலும் இருந்து வந்துள்ளனர்.
தற்போது இவர்களது தொடர்புகள் குறித்தும் அமலாக்கத்துறை ஆராயத் தொடங்கியிருப்பதால் பெரும்புள்ளிகள் பலரும் கதிகலங்கிப் போயுள்ளனர்.