கொரோனாவிலும் இந்து, முஸ்லீம் பாகுபாடு? சர்ச்சையில் குஜராத் அரசு மருத்துவமனை! மறுக்கும் துணை முதல்வர்
அகமதாபாத்: குஜராத் மாநிலம், அகமதாபாத் சிவில் மருத்துவமனையில், இந்து மற்றும் முஸ்லீம்கள் என்று பாகுபாடுபடுத்தி, கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்படுவதாக ஆங்கில நாளிதழில் செய்தி வெளியானது. இதை அந்த மாநில துணை முதல்வர் நிதின் பட்டேல் மறுத்துள்ளார்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் வெளியிட்ட அந்த செய்தியில், மருத்துவ கண்காணிப்பாளர், டாக்டர் குணவந்த் ஹெச் ராத்தோட் பெயரை குறிப்பிட்டு, அவர் கூறியதாக ஒரு செய்தி வெளியானது. அதன்படி, மேற்குறிப்பிட்ட அந்த மருத்துவமனையில் இந்து மற்றும் முஸ்லீம் நோயாளிகளுக்கு தனித்தனி படுக்கை வசதி செய்து கொடுக்கப்பட்டு, சிகிச்சையளிக்கப்படுகிறதாம்.
அகமதாபாத் மருத்துவமனையில், மொத்தம் 1,200 படுக்கைகள், கொரோனா பாதித்த நோயாளிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இதுபோன்ற ஒரு பிரிவினை காட்டப்படுவதாக அந்த நாளிதழ் கூறியது. ஆனால் இதை அந்த மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சரும், துணை முதல்வருமான நிதின் பட்டேல் மறுத்துள்ளார்.
"கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகள் அவர்களுக்கு ஏற்பட்ட அறிகுறிகள் அடிப்படையில் சிகிச்சைக்கு உள்ளாகிறார்கள். லேசான அறிகுறி, கடுமையான அறிகுறி உள்ளிட்டவற்றின் அடிப்படையில் படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன" என்று அந்த மாநில சுகாதாரத்துறை சார்பில், விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா.. 3 மண்டலங்களாக பிரிக்கப்படுகிறது இந்தியா.. சுகாதாரத் துறை அதிரடி அறிவிப்பு
ஆனால் நாளிதழ் வெளியிட்ட செய்தியில், ஒரு நோயாளி தங்களிடம் இதுகுறித்த தகவலை பகிர்ந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஏ-4 வார்டிலிருந்து, சி-4 வார்டுக்கு 28 நோயாளிகள் ஷிப்ட் செய்யப்பட்டதாகவும், அவர்கள் அனைவரும் ஒரே மதப் பிரிவை சேர்ந்த பெயர்களை கொண்டவர்கள் என்றும், இதுபற்றி மருத்துவ பணியாளர்களிடம் கேட்டபோது, ஒரே மதப்பிரிவினர் ஒரே இடத்தில் இருந்தால், வசதியாக உணர்வார்கள் என்று தெரிவித்தார் என்றும் அந்த நோயாளி நாளிதழிடம் கூறியுள்ளார்.
இதன்பிறகுதான், அந்த நாளிதழ் தரப்பில், டாக்டர் ரத்தோட்டைத் தொடர்பு கொண்டுள்ளனர். அவர், "பொதுவாக, ஆண் மற்றும் பெண் நோயாளிகளுக்கு தனி வார்டுகள் உள்ளன, ஆனால் இங்கே, இந்து மற்றும் முஸ்லீம் நோயாளிகளுக்கு தனி வார்டுகளை உருவாக்கியுள்ளோம்" என்று கூறினாராம்.
பிரிவினைக்கான காரணம் கேட்கப்பட்டபோது, டாக்டர் ரத்தோட், "இது அரசின் முடிவு, நீங்கள் அவர்களிடம் கேட்கலாம்" என்று பதில் அளித்தாராம். இவ்வாறு இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் கூறியுள்ளது.