ஜின்பிங் வருகையின் போது வடகிழக்கு பணியாளர்கள் வரக்கூடாது- அகமதாபாத் ஹோட்டல் மீது விசாரணை!
டெல்லி: சீனா அதிபர் ஜின்பிங் வருகையின் போது தமது ஹோட்டலில் பணியாற்றும் வடகிழக்கு பணியாளர்கள் பணிக்கு வரக் கூடாது என்று அகமதாபாத் ஹோட்டல் உத்தரவிட்டது குறித்து விசாரணை நடத்த உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
சீனா அதிபர் ஜின்பிங் 3 நாள் பயணமாக இந்தியா வருகை தந்திருந்தார். அவர் முதலில் குஜராத் நகரின் அகமதாபாத்துக்கு சென்றிருந்தார். ஜின்பிங் வருகையின் போது தமது ஹோட்டலில் பணியாற்றும் வடகிழக்கு மாநில பணியாளர்கள் பணிக்கு வர வேண்டாம் என்று அந்நகர ஹோட்டல் ஒன்று உத்தரவிட்டிருந்தது.
இந்த விவகாரம் கடந்த வாரம் ஊடகங்களில் வெளியானது. இது பற்றி கருத்து தெரிவித்த அஸ்ஸாம் முதல்வர் தருண் கோகய், இந்த உத்தரவு வடகிழக்கு மாநிலங்களை அவமதிப்பதாகும். நாங்கள் தேசப்பற்றாளர்கள் இல்லை என்று சந்தேகிக்கிறார்களா? அல்லது இந்தியாவின் குடிமக்கள் இல்லையா? இது சரியான நடவடிக்கை இல்லை என்று கூறியிருந்தார்.
இது குறித்து தற்போது உள்துறை அமைச்சகம் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.