ரூல்ஸ் பேசிய ஊழியரை வேலையை விட்டு நீக்கிய ஏர் இந்தியா
டெல்லி: ஏமன் மீட்பு நடவடிக்கையில் பங்கேற்று பாராட்டுகளைப் பெற்ற விமான ஊழியரை, ஒழுங்கு நடவடிக்கை காரணமாக பணியில் இருந்து நீக்கியுள்ளது ஏர் இந்தியா.
ஏர் இந்தியா விமான ஊழியராக பணி புரிந்து வந்தவர் மயன்க் சர்மா. இவர் கடந்த மாதம் உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்டிருந்த ஏமனில் சிக்கியிருந்த இந்தியர்களை மீட்கும் பணியில் திறம்பட செயல்பட்டதற்காக பாராட்டுகளைப் பெற்றார்.
ஆனால், அந்த சந்தோஷம் நீண்ட காலம் நீடிக்கவில்லை. தற்போது இவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, அவரை பணியில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளது ஏர் இந்தியா.
கடந்தமாதம் பணி நிமித்தமாக ஜெட்டா சென்றிருந்தார் மயங்க். அப்போது தனக்கு 22 மணி நேரம் ஓய்வு தேவை என விமானியிடம் அவர் சண்டையிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கேப்டன் மயங்கை விமான நிலையத்திலேயே விட்டு விட்டு மற்ற ஊழியர்களோடு விமானத்தில் புறப்பட்டு வந்து விட்டார்.
பொதுவாக பெரிய போயிங் விமானங்களில் 12 விமான ஊழியர்கள் இருக்க வேண்டும். ஆனால், 11 ஊழியர்களோடு அந்த விமானம் புறப்பட்டுச் சென்றதால் அதன் அவசரக்கதவு ஒன்று இயக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதற்கிடையே ஜெட்டாவில் சிக்கிக் கொண்ட மயங்க், இந்திய தூதரக உதவியோடு மீண்டும் இந்தியா திரும்பியுள்ளார்.
இது தொடர்பாக ஏர் இந்தியா நிர்வாகத்திற்கு மயங்க் பல்வேறு புகார் மெயில்களை அனுப்பியுள்ளார். ஏற்கனவே, இது போன்று பல்வேறு புகார் மெயில்களை அவர் அனுப்பியதாகத் தெரிகிறது. மேலும், மயங்கால் பல்வேறு சமயங்களில் விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டதாகவும் புகார் உள்ளது. பயணிகளும் மயங்க் மீது குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளனர்.
இதனால், மயங்க் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்த ஏர் இந்தியா, அவரைப் பணியில் இருந்து நீக்கியுள்ளது.
ஆனால், மயங்க் பணி நீக்கம் செய்யப்பட்டதற்கு அவருடைய சக ஊழியர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். ஜெட்டாசில் சிக்கிக் கொண்ட மயங்க், அங்கு தங்கி இருந்த ஹோட்டல் பில்லைக் கட்ட ஏர் இந்தியா மறுத்து விட்டதாகவும், மயங்க்குடன் பிரச்சினையில் ஈடுபட்ட விமானி மீது ஏற்கனவே பல குற்றச்சாட்டுகள் உள்ளபோதும், அவர் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப் படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.