ராஜ்யசபாவில் தயாநிதி மாறனுக்காக மைத்ரேயனுடன் மோதிய கனிமொழி!
டெல்லி: ராஜ்யசபாவில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மீதான சட்டவிரோத பி.எஸ்.என்.எல். இணைப்புகள் வழக்கு விவகாரத்தை எழுப்ப முயன்ற அதிமுகவின் மைத்ரேயனுக்கு திமுக எம்.பி கனிமொழி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
ராஜ்யசபா நேற்று காலையில் தொடங்கியதும் கேள்வி நேரம் நடைபெற்றது. அப்போது தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர் டி.பி. திரிபாதி., முந்தைய ஆட்சியில் அமைக்கப்பட்ட மத்திய அமைச்சர்கள் குழு கலைக்கப்பட்டு விட்டதால், அக்குழு அளித்த பி.எஸ்.என்.எல், எம்.டி.என்.எல் பொதுத்துறை தொலைபேசி நிறுவனங்களின் நிதி நிலைமை தொடர்பான பரிந்துரை மீது மத்திய அரசின் தற்போதையை நிலை என்ன? என்று கேட்டார்.
அதற்கு மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், நிதி நிலைமை பலவீனமாக உள்ள பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் ஆகியவற்றை வலுப்படுத்தி சந்தையில் போட்டி போடக் கூடிய அளவுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற முனைப்புடன் நான் பணியாற்றி வருகிறேன். இது தொடர்பாக இரண்டு பொதுத் துறை நிறுவனங்களின் நான்கு தலைமை பொது மேலாளர்களுடன் நான் பேசியுள்ளேன். அடுத்த ஐந்தாண்டுகளில் ரூ. 38,468 கோடி அளவுக்கு முதலீடு செய்து அவற்றின் கட்டமைப்பை வலுப்படுத்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று பதில் அளித்தார்.
தயாநிதி மாறன் விவகாரம்
அப்போது அதிமுக உறுப்பினர் வா. மைத்ரேயன், பிஎஸ்என்எல் வருவாய் இழப்புடன் செயல்படுகிறது என்பதை ஒப்புக் கொள்ளும் மத்திய அமைச்சர், சென்னையில் முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்தவர் தனது வீட்டில் சட்டவிரோத பிஎஸ்என்எல் இணைப்புகளை இணைப்பகம் போல நடத்தியதால் ஏற்பட்ட வருவாய் இழப்பை அறிவாரா? அது தொடர்பான விசாரணை நடவடிக்கை என்ன நிலையில் உள்ளது என்பதை விளக்கத் தயாரா? என்றார்.
கனிமொழி எதிர்ப்பு
இதற்கு திமுக உறுப்பினர் கனிமொழி கடும் ஆட்சேபம் தெரிவித்தார். சம்பந்தம் இல்லாத கேள்வியை மைத்ரேயன் எழுப்ப அனுமதிக்கக் கூடாது என்று அவர் ராஜ்யசபா தலைவரை கேட்டுக் கொண்டார்.
பிடிவாதம் பிடித்த மைத்ரேயன்
அதைப் பொருள்படுத்தாத மைத்ரேயன் "வருவாய் இழப்பு உள்ளதை துறையின் அமைச்சரே ஒப்புக் கொள்கிறார். அந்த வருவாய் இழப்பில் ஒரு பகுதிதான் சென்னை பிஎஸ்என்எல் சட்டவிரோத இணைப்புகள் விவகாரமும். எனவே, நான் தொடர்புடைய கேள்வியைத்தான் எழுப்புகிறேன். அந்த உரிமையை ராஜ்யசபா தலைவர் எனக்கு அளிக்க வேண்டும்' என்றார்.
காங்கிரஸும் எதிர்ப்பு
ஆனால், சபையில் இருந்த ரவி சங்கர் பிரசாத். எந்த கருத்தையும் தெரிவிக்காமல் இருக்கையில் அமைதியாக அமர்ந்திருந்தார். காங்கிரஸ் மூத்த உறுப்பினர்கள் சத்யவிரத சதுர்வேதி, ரேணுகா சௌத்ரி ஆகியோர் "இது நீதிமன்ற விசாரணையில் நிலுவையில் உள்ள விவகாரம். அதை எழுப்ப அனுமதிக்கக் கூடாது' என்றனர். அதை ஏற்று, மைத்ரேயன் அக்கேள்வியை எழுப்ப அனுமதி கிடையாது என ஹமீது அன்சாரி கூறினார்.
அன்சாரியுடன் மோதல்
இதனால் அதிருப்தியடைந்த மைத்ரேயன் "அவையின் மையப் பகுதிக்குச் சென்று "எனக்கு எவ்வாறு நீங்கள் அனுமதி அளிக்காமல் இருக்கலாம். வருவாய் இழப்பு தொடர்புடைய கேள்வியைத் தானே எழுப்புகிறேன். எனது உரிமையை மறுக்கக் கூடாது. நான் தனிப்பட்ட முறையில் யாருடைய பெயரையும் குறிப்பிட்டு கேள்வி எழுப்பவில்லை. பொதுப்படையாகவே கேள்வி கேட்கிறேன். "பிஎஸ்என்எல் சட்டவிரோத இணைப்பக விவகாரத்தில் விசாரணை நடைபெறவே இல்லை என அமைச்சரால் கூற முடியுமா? என்றார்.
சபை நடவடிக்கை ஒத்திவைப்பு
இதையடுத்து ஹமீது அன்சாரி "அது வேறு விஷயம், திரிபாதி எழுப்பியது வேறு விஷயம். நீங்கள் சபையின் நேரத்தை வீணடிக்கும் உத்திக்கு என்னால் அனுமதி அளிக்க முடியாது என்றார். இதனால் மீண்டும் அதிருப்தி அடைந்த மைத்ரேயன் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டார். இதனால் காலை 11.33 மணி முதல் 11.43 மணிவரை ராஜ்யசபா நடவடிக்கையை ஹமீது அன்சாரி ஒத்திவைத்தார்.