அதிமுக எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய கோரி திமுக வழக்கு- உச்சநீதிமன்றம் விசாரிக்க செம்மலை மனு
11 அதிமுக எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக் கோரும் திமுக வழக்கை உச்சநீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என எம்.எல்.ஏ. செம்மலை திடீரென மனுத் தாக்கல் செய்திருக்கிறார்.
டெல்லி: 11 அதிமுக எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் செம்மலை எம்.எல்.ஏ. அதிரடியாக மனுத்தாக்கல் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ் போர்க்கொடி தூக்கிய போது செம்மலையும் ஆதரவு தெரிவித்தார். ஆனால் ஈபிஎஸ் அணியுடன் ஓபிஎஸ் அணி இணைந்த போது தமக்கும் அமைச்சர் பதவியை செம்மலை எதிர்பார்த்ததாக கூறப்பட்டது.
உச்சநீதிமன்றத்தில் செம்மலை மனு
ஆனால் பதவி கிடைக்காததால் செம்மலை அதிருப்தியில் இருக்கிறார் எனவும் தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் இன்று உச்சநீதிமன்றத்தில் செம்மலை திடீரென ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
ஓபிஎஸ் தகுதி நீக்க வழக்கு
அதில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக 11 எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர். கட்சி கொறடா உத்தரவை மீறி வாக்களித்த 11 பேரையும் தகுதி நீக்கம் செய்ய வலியுறுத்தி திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
செம்மலையால் பரபரப்பு
இந்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அதிமுகவின் 11 எம்.எல்.ஏக்களில் செம்மலையும் ஒருவர்.
நவம்பரில் விசாரணை
திமுக தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ரவிச்சந்திரபாபு விசாரித்து வருகிறார். நவம்பர் முதல் வாரத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.