காவிரி: அதிமுக எம்பிக்கள் தற்கொலைதான் அடம் பிடிக்க வேண்டாம்...ஜஸ்ட் பதவியை ராஜினாமா செய்தாலே போதுமே!
Recommended Video
டெல்லி: காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காவிட்டால் தற்கொலைதான் செய்வோம் என்று அதிமுக எம்.பிக்கள் அடம்பிடிக்காமல் பதவியை ராஜினாமா செய்தாலே போதும் என்பதுதான் தமிழக மக்களின் எதிர்பார்ப்பு. இப்படி தற்கொலை என பேசுவதெல்லாம் பக்கா நாடகம்தான் என்பதை மக்கள் நன்றாகவே உணர்ந்துள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியத்தை உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி மத்திய அரசு அமைக்க வேண்டும் என்பது தமிழகத்தின் கோரிக்கை. தமிழக அனைத்துக் கட்சிகள் கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசு 29-ந் தேதி வரை பொறுத்திருந்துவிட்டு கருத்து சொல்வோம் என்கிறது. இந்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் உச்சநீதிமன்றத்தில் விளக்கம் கேட்கிறதாம் மத்திய பாஜக அரசு.
மத்திய பாஜக அரசின் இந்த பச்சை துரோகம் தமிழகத்தை கொதிக்க வைத்துள்ளது. இதனிடையே ராஜ்யசபாவில் இன்று பேசிய அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன், அதிமுக எம்.பிக்கள் அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தமிழகத்தில் எழுகிறது. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காவிட்டால் நாங்கள் ராஜினாமா செய்யமாட்டோம்... அதிமுக எம்.பி.க்கள் அனைவரும் தற்கொலைதான் செய்வோம் என ஆவேசப்பட்டிருக்கிறார்.
ஆனால் இந்த ஆவேசத்தை தமிழக மக்கள் ஒரு திசை திருப்பும் நாடகமாகத்தான் பார்க்கிறார்கள். தமிழருக்கு துரோகம் செய்யும் பாஜக அரசுக்கு முட்டுக் கொடுத்து நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவருவதை தடுத்து காவிரிக்காக அமளி என நாடகம் போட்டனர். அந்த நாடகத்தை நாடும் நாட்டு மக்களும் நன்கு உணர்ந்து கொண்டனர்.
இப்போது தற்கொலை செய்வேன்; கூண்டோடு சாவோம் என்றெல்லாம் ஜம்பம் பேசாமல், அன்று மத்திய அமைச்சராக இருந்த வாழப்பாடி ராமமூர்த்தி செய்ததைப் போல உங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு மத்திய அரசின் முகத்தில் ராஜினாமா கடிதங்களை வீசி எறிந்துவிட்டு வாருங்கள்... அதை மட்டுமேதான் தமிழக மக்கள் விரும்புகிறார்கள். இதுபோன்ற வசனங்களை அல்ல!