ஜி.எஸ்.டி மசோதாவுக்கு லோக்சபாவிலும் அதிமுக எதிர்ப்பு.. கூட்டாட்சிக்கு எதிரானது என வேணுகோபால் பேச்சு
டெல்லி: திருத்தப்பட்ட ஜி.எஸ்.டி மசோதாவிற்கு லோக்சபாவில் அதிமுக எதிர்ப்பு தெரிவித்தது.
சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவான ஜிஎஸ்டி கடந்த ஆண்டு லோக்சபாவில் நிறைவேறியது. காங்கிரஸ் எதிர்ப்பால் ராஜ்யசாபாவில் மசோதா உடனடியாக நிறைவேறவில்லை.
காங்கிரஸ் கூறிய திருத்தங்கள் சிலவற்றை மசோதாவில் மத்திய அரசு கொண்டுவந்ததையடுத்து, கடந்த வாரம் ராஜ்யசபாவில் ஜி.எஸ்.டி மசோதா நிறைவேறியது. 203 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர். யாருமே எதிர்த்து வாக்களிக்கவில்லை. அதிமுக எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்திருந்தது.
லோக்சபாவில் தாக்கல்
லோக்சபா நிறைவேற்றிய ஒரு சட்டம் ராஜ்யசபாவில் சிறு திருத்தத்திற்கு உள்ளானாலும், அந்த சட்ட மசோதாவுக்கு மீண்டும் லோக்சபாவில் ஒப்புதல் வாங்க வேண்டியது அவசியம். அதன்படி, ஜி.எஸ்.டி சட்ட மசோதா லோக்சபாவில் இன்று மதியம், ஜேட்லியால் தாக்கல் செய்யப்பட்டது.
காங்கிரஸ் ஆதரவு
விவாதத்தில் பல கட்சி உறுப்பினர்களும் பங்கேற்றனர். முதலில் பேசிய காங்கிரஸ் எம்.பி வீரப்ப மொய்லி, தனது கட்சி, இம்மசோதாவிற்கு முழு ஆதரவு வழங்குவதாக தெரிவித்தார்.
முதல்வர் கடிதம்
வேணுகோபால் பேசுகையில், நாங்கள் ஜி.எஸ்.டி மசோதாவை தொடர்ந்து எதிர்த்து வந்துள்ளோம். ஜி.எஸ்.டி மசோதா தொடர்பாக தமிழக முதல்வர் பல முறை கடிதம் எழுதியுள்ளார். ஆனால் அவரது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.
கோரிக்கைகள்
குறிப்பாக, ஜி.எஸ்.டி கவுன்சில், அரசியல் சாசன அமைப்பாக இருக்க கூடாது, ஜி.எஸ்.டி வரி விதிப்பிலிருந்து பெட்ரோலிய பொருட்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும், புகையிலை பொருட்கள் மீது கூடுதலாக வரி விதிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்பது போன்றவை எங்கள் கட்சி கோரிக்கை. ஆனால் இவை கண்டுகொள்ளப்படவில்லை.
எதிர்ப்பு
ஜி.எஸ்.டி வரி விதிப்பு, கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்ற எங்கள் கருத்தில் மாற்றமில்லை. இவ்வாறு வேணுகோபால் பேசினார்.