இரட்டை இலை சின்னம் யாருக்கு ? டெல்லியில் இன்று விசாரணை
இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று தேர்தல் ஆணையத்தில் நடக்க இருக்கிறது.
டெல்லி: இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று தேர்தல் ஆணையத்தில் நடக்க இருக்கிறது. இதுவரை 6 கட்ட விசாரணைகள் முடிந்து இன்று 7ம் கட்ட விசாரணை டெல்லியில் நடக்க உள்ளது. இந்த வழங்கில் தீர்ப்பு வழங்குவதற்கு உச்சநீதிமன்றம் நவம்பர் 10ம் தேதி வரை தேர்தல் ஆணையத்திற்கு கெடு அளித்துள்ளது என்பதால் இன்றைய நாள் மிகவும் முக்கியமானது ஆகும்.
பிளவுபட்ட ஓபிஎஸ் அணியும் சசிகலா அணியும் இரட்டை இலைக்கு உரிமை கோரியதால் ஆர்.கே. நகர் தேர்தலின் போது அதிமுகவும், இரட்டை இலை சின்னமும் தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டன. சசிகலா சிறைக்கு சென்ற பிறகு அந்த அணி முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டில் வந்தது.
சசிகலா அணியின் ஒரு பிரிவினர் துணை பொதுச்செயலாளர் தினகரன் தலைமையில் செயல்பட்டு வருகிறார்கள். இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே ஒதுக்கவேண்டும் என இருவருமே முறையிட்டு வருகின்றனர். இதற்காக இருவரும் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டனர்.
டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் கமிஷன் அலுவலகத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஏ.கே.ஜோதி முன்னிலையில் நடந்து வரும் இந்த வழக்கு விசாரணை 6 கட்டங்களை நிறைவு செய்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதியில் இருந்து நவம்பர் 6ம் தேதிவரை இரட்டை இலை வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது.
இதுவரை டி.டி.வி தினகரன் தரப்பு வாதம் முடிந்துள்ளது. இனி ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பு வாதம் முடிந்த பின்னரே சின்னம் யாருக்கு என்று தேர்தல் ஆணையம் தீர்ப்பு அளிக்கும். அவர்கள் வாதத்தை கேட்கும் பொருட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 8ஆம் தேதிக்கு தேர்தல் ஆணையம் ஒத்திவைத்தது.
இந்த வழக்கில் 7ஆம் கட்ட விசாரணை தேர்தல் ஆணையத்தில் இன்று நடைபெற்றது. இரட்டை இலை சின்ன வழக்கு விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளை அளித்த கெடு முடிந்து விட்டது. அதே நேரத்தில் உச்சநீதிமன்றம் நவம்பர் 10ம் தேதி வரை தேர்தல் ஆணையத்திற்கு கெடு அளித்துள்ளது. அதற்குள் தேர்தல் ஆணையம் சின்னம் யாருக்கு என்று விசாரித்து தீர்ப்பை அறிவிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.