லோக்சபாவில் எதிர்க்கட்சி அந்தஸ்தை இணைந்து கோர அதிமுக- திரிணாமுல் அதிரடி திட்டம்
டெல்லி: லோக்சபாவில் எதிர்க்கட்சி அந்தஸ்தை கோருவதற்காக என அதிமுகவும் திரிணாமுல் காங்கிரஸும் ஒரு அணியாக உருவெடுக்கிறது.
லோக்சபாவில் 543 எம்.பிக்கள் உள்ளனவர். இவர்களில் 10% எம்.பி.க்களைக் கொண்ட அதாவது 54 எம்.பிக்களைக் கொண்ட கட்சிக்குதான் அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்கும்.
லோக்சபா தேர்தலிலோ காங்கிரஸ் கட்சி வெறும் 44 இடங்களைத்தான் கைப்பற்றியுள்ளது. இதனால் அக்கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்குமா என்பது கேள்விக்குறி.
சபாநாயகர் முடிவு
இருப்பினும் 2வது பெரிய கட்சி என்ற அடிப்படையில் காங்கிரஸ் எதிர்க்கட்சியாக அமையவும் வாய்ப்பிருக்கிறது. இந்த விவகாரத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் சபாநாயகருக்குத்தான் இருக்கிறது.
அதிமுக- திரிணாமுல் வியூகம்
அதனால் காங்கிரஸுக்கு வேட்டு வைக்கும் வகையில் தற்போது அதிமுகவும் திரிணாமுல் காங்கிரஸும் கை கோர்க்க முடிவு செய்துள்ளன.
71 எம்.பிக்கள்
தேர்தலில் அதிமுக 37 இடங்களையும் திரிணாமுல் 34 இடங்களையும் பெற்றுள்ளன. இரு கட்சிகளும் ஒரு அணியாக இணையும் போது மொத்தம் 71 எம்.பிக்கள் கொண்ட தங்களுக்கே எதிர்க்கட்சி அந்தஸ்து வேண்டும் என்று கோரவும் இரண்டும் முடிவு செய்துள்ளன.
துணை சபா
அப்படி அங்கீகரிக்கப்பட்டுவிட்டால் துணை சபாநாயகர் பதவியும் இந்த அணிக்கே கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
தம்பிதுரைக்கு வாய்ப்பு?
அதிமுக எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் திரிணாமுல் காங்கிரஸ் துணை சபாநாயகர் பதவியையும் விரும்புகிறதாம். அப்படியானால் அதிமுகவின் நாடாளுமன்ற குழுத் தலைவரான மு. தம்பித்துரை எதிர்க்கட்சித் தலைவராக அமரக் கூடும்.
தேர்தலுக்கு முந்தைய கூட்டணிதான்
இருப்பினும் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி கணக்கில் எடுத்துக் கொள்ளமாட்டார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் அதிமுக தரப்போ, தேர்தலின் போதே ஜெயலலிதா பிரதமராக ஆதரவு தெரிவித்தவர் மமதா பானர்ஜி. அதனால் எங்கள் கூட்டணி தேர்தலுக்கு முந்தைய கூட்டணி என்று வாதிடக் கூடும் என்றும் கூறப்படுகிறது.
நெருக்கடியில் பாஜக
அதிமுக- திரிணாமுல் கோரிக்கையை ஏற்றாக வேண்டிய நெருக்கடியும் பாரதிய ஜனதா கட்சிக்கு இருக்கிறது. இந்த கோரிக்கையை ஏற்றால்தான் ராஜ்யசபாவில் அதிமுக- திரிணாமுல் ஆதரவையும் பெற முடியும் எனவும் பாஜக கருதலாம்.
அத்வானி விரும்பலையே
ஆனால் பாஜக மூத்த தலைவர் அத்வானியோ காங்கிரஸைத்தான் எதிர்க்கட்சியாக அமர வைக்க வேண்டும் என்று கூறிவருகிறாராம்.
சாதிக்க துடிக்கும் ஜெ- மமதா
இதை சாதித்துவிட்டால் பிரதான எதிர்க்கட்சியாகவே நாடாளுமன்றத்தில் அமர்ந்தோம் என்பது இரு கட்சிகளுக்கும் மிகப் பெரிய சாதனையாகும். மேலும் மாநிலங்களின் சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்கும் இது பலமாக இருக்கும் என்பதான் அதிமுக- திரிணாமுல் கணக்கு.