"நாடாளுமன்றத்தை அப்படியே அலேக்கா தூக்கி..." - எம்.பி.நவநீதகிருஷ்ணன் அடடே ஐடியா
நாடாளுமன்ற கூட்டங்களை தென் இந்தியாவில் நடத்த வேண்டும் என அதிமுக எம்.பி.நவநீதகிருஷ்ணன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
டெல்லி: டெல்லியில் நாளுக்கு நாள் காற்று மாசடைந்து வருவதால் தலைநகரில் நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத்தொடர்களை தென் இந்தியாவிற்கு மாற்ற, பரிசீலனை செய்யும்படி அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.
"காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர்......" என்று பாடியும், சொல்ல வந்த விஷயத்தை விட "அம்மா ஜெயலலிதா" என்ற வார்த்தையை அதிகமாக பேசியும் நாடாளுமன்றத்தில் பிரபலமானவர் எம்.பி.நவநீதகிருஷ்ணன். மாநிலங்களவையில் நேற்றைய கூட்டத்தில் "டெல்லி காற்று மாசு" குறித்த விவாதம் நடைபெற்றது.
தமிழக அரசியலுக்கு அப்பாற்பட்ட, சர்ச்சையில்லாத தலைப்பு என்பதால் ஆர்வத்துடனும் உத்வேகத்துடனும் இந்த விவாதத்தில் கலந்துக்கொண்ட அதிமுக எம்.பி.நவநீதகிருஷ்ணன், டெல்லி விரைவில் மக்கள் வாழ முடியாத நகரமாக மாறி விடும் என தெரிவித்தார்.
இந்த பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணமுடியாது என்பதால் கூட்டத்தொடர்களை தென் இந்தியாவிற்கு மாற்ற வேண்டும். கூட்டத்தொடர்களை அங்கு மாற்றுவதன் மூலம் வடமாநில எம்.பி. நண்பர்கள் இயற்கை எழில் கொஞ்சும் சுகாதாரமான நகர சூழ்நிலைகளை அனுபவிக்கலாம் என்றார்.
கூட்டத்தொடர்களை நாக்பூர், பெங்களூரு அல்லது சென்னை உள்ளிட்ட நகரங்களில் நடத்தலாம் என்றும், இது தேசிய ஒருமைப்பாட்டிற்கு உதாரணமாக இருக்கும் என்றும் நவநீதகிருஷ்ணன் யோசனை தெரிவித்தார்.
ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, அங்கே பார்க்க வந்த எம்.பிகளுக்கு மத்தியில் தமிழக ஊடகங்களுக்கு விளக்கம் அளிக்கிறேன் என்று வந்து நின்ற நவநீதகிருஷ்ணனை, செய்தியாளர்கள் கேள்விகளால் துளைத்தெடுத்தனர். அப்போதிலிருந்து செய்தியாளர்களை தவிர்க்கும் அவர், தற்போது நாடாளுமன்றத்தில் கூறிய இந்த யோசனையின் மூலமாக மீண்டும் தமிழக செய்திகளில் இடம்பிடிக்க ஆரம்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.