எய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்தும் மருந்து - டிசம்பர் முதல் கொல்கத்தாவில் அறிமுகம்!
கொல்கத்தா: கொல்கத்தாவில் முதன்முறையாக எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்த மருந்து கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த மருந்து வருகிற டிசம்பர் முதல் பயன்பாட்டுக்கு வருகிறது.
கொல்கத்தா நகரில் உள்ள சோனாகச்சி பகுதியில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விபசார அழகிகள் செயல்பட்டு வருகின்றனர். ஆசியாவின் மிகப்பெரிய சிவப்பு விளக்குப் பகுதிகளில் இதுவும் ஒன்று என வர்ணிக்கப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களிடம் இருந்து அந்நோய் மற்றவர்களுக்கும் பரவாமல் தடுக்கும் பொருட்டு எய்ட்ஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் மத்திய சுகாதார அமைச்சகம் ஆகியவை ஒப்புதல் அளித்துள்ளன.
இந்த மருந்து பற்றி தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பின் திட்ட அதிகாரி பி.பி.ரேவாரி கூறுகையில், ‘‘இந்த மருந்து சாத்தியமாக கூடியது தான். இதுபோன்ற மருந்துகள் இந்தியாவில் நடைமுறைக்கு வருவது இதுவே முதன்முறை'' என்றார். மேலும், சோதனை அடிப்படையில் தான் இந்த மருந்துகள் பயன்பாட்டுக்கு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
அதேசமயம் இந்த மருந்துகளை வைத்து எச்.ஐ.வி பாதிக்கப்பட்டவர்களிடமும், பாதிப்பில்லாதவர்களிடமும் நேரடியாக ஆய்வு நடத்தி விட்டதாகவும், இவை வருகிற டிசம்பர் முதல் பயன்பாட்டுக்கு வரும் என்றும் சோனாகச்சி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன அதிபர் சமர்ஜித் ஜனா தெரிவித்துள்ளார்.