வயதான தாயை சரக்கு ரயில் பெட்டியில் போட்டுவிட்டு ஓடிய மகன் : ஒடிஷாவில் அவலம்
ஒடிஷாவில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட தாயை பெற்ற மகனே சரக்கு ரயில் பெட்டியில் விட்டுச் சென்றுள்ளார்.
ஜர்ஷுகுடா : ஒடிஷாவில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட தனது தாயை மகன் ஒருவர் சரக்கு ரயில் பெட்டியில் விட்டுச்சென்றுள்ள அவலம் நேர்ந்துள்ளது.
ஒடிஷா மாநிலத்தில் உள்ள பெல்பஹார் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு, உடல் நலம் மோசமடைந்து இருந்த தாயை மருத்துவமனையில் அனுமதிக்காமல் சரக்கு ரயில் பெட்டியில் விட்டுச் சென்ற அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. நான்கு நாட்களுக்கு பிறகு மோசமான நிலையில் , அந்த தாய் மீட்கப்பட்டு உள்ளார்.
பெல்பஹார் பகுதியைச் சேர்ந்த இந்திரா மெஹர் இவருக்கு வயது 52. இவரது கணவர் கோவிந்த் மெஹர். இவர்கள் அப்பகுதியில் உள்ள குமதேரா பகுதியில் வசித்து வந்தனர். இந்த தம்பதியின் ஒரே மகன் காகேஷ்வர் மெஹர். தனது தாயை வீட்டில் வைத்து பராமரிக்க விரும்பாத காகேஷ்வர் ஜர்ஷுகுடா பகுதியில் உள்ள ஆதரவற்ற முதியோர் காப்பகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் தனது தாய் இந்திராவை சேர்த்துவிட்டார்.
ஏற்கனவே உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த இந்திரா மெஹரின் சர்க்கரை நோயின் அளவு கூடியதால் காப்பக நிர்வாகிகள் காகேஷ்வரை அழைத்து இந்திராவை வீட்டிற்கு அழைத்துச் சென்று மருத்துவ சிகிச்சை அளிக்குமாறு அனுப்பி வைத்தனர்.
காப்பகத்தில் இருந்து தனது தாயை கட்ந்த மாதம் நவம்பர் 30ம் தேதி அழைத்துச்சென்ற காகேஷ்வர் மருத்துவமனைக்கு கூட்டிச்செல்லாமல், பெல்பஹார் ரயில் நிலையத்தில் நின்று இருந்த நிலக்கரி ஏற்றி வந்த சரக்கு ரயிலில் போட்டு விட்டுச் சென்றுள்ளார்.
நான்கு நாட்களாக உணவு, தண்ணீர் எதுவும் இன்றி கவனிப்பாரற்று கிடந்த இந்திராவை ரயில்பெட்டியை சுத்தம் செய்ய வந்த ஊழியர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ரயில்வே நிர்வாக அதிகாரிகளிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக ரயில்வே நிர்வாகத்தினர் இந்திராவை மருத்துவ சிகிச்சைக்கு சேர்க்க ஏற்பாடு செய்து, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அளிக்கப்பட்டுள்ள புகாரின் பேரில், போலீஸார் காகேஷ்வரை தேடி வருகின்றனர். பெற்ற தாயை மகனே அனாதையாக ரயில் பெட்டியில் விட்டுச்சென்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.