பீகாரை போல மே.வங்கத்திலும் முஸ்லிம் வாக்குகளுக்கு குறிவைக்கும் ஓவைசி.. உதறலில் காங்-இடதுசாரிகள்
கொல்கத்தா: பீகாரைப் போல மேற்கு வங்க சட்டசபை தேர்தலிலும் முஸ்லிம் வாக்குகளுக்கு குறிவைத்து ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி போட்டியிட உள்ளது. இதனால் காங்கிரஸ்-இடதுசாரிகள் கூட்டணி இப்போதே முஸ்லிம் வாக்குகள் எங்கே பறிபோய்விடுமோ என்ற பதைபதைப்பில் வியூகங்கள் வகுக்கின்றன.
மேற்கு வங்க சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. மேற்கு வங்கத்தில் எப்படியாவது அதிகாரத்தைக் கைப்பற்றிவிட வேண்டும் என்பதில் பாஜக படுதீவிரமாக இருக்கிறது.
ஆனால் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, ஆட்சி அதிகாரத்தைத் தக்க வைக்க அத்தனை வியூகங்களையும் வகுத்திருக்கிறது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை காங்கிரஸ்- இடதுசாரிகள் கூட்டணி அமைத்து களத்தில் இருந்தால் பாஜகவின் வெற்றி இடங்களை கணிசமாக குறைக்கும்; ஆட்சியில் திரிணாமுல் நீடிக்க உதவும் என்பதுதான் கணக்கு.
காங்-இடதுசாரிகள் கூட்டணி
கடந்த லோக்சபா தேர்தலின் போதே, மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைக்காமல் ஆளுக்கு ஒரு திசையில் பிரிந்து போனதால்தான் பாஜக ஆதாயம் அடைந்தது என பகிரங்கமாகவே மமதா பானர்ஜி கூறியிருந்தார். இதன்பின்னர் காங்கிரஸ்-இடதுசாரிகள் இணைந்த எதிர்க்கட்சிகள் அணியில் மமதாவும் பங்கேற்க தொடங்கினார். பாஜகவை வீழ்த்த காங்கிரஸ்-இடதுசாரிகள் கூட்டணியின் தேவையை இருதரப்பும் உணர்ந்தது.
பீகார் நிலவரம்
இதனையே பீகார் சட்டசபை தேர்தலிலும் செயல்படுத்தினர். பீகாரில் காங்கிரஸுக்கு அதிக இடங்கள் கொடுக்காமல் இருந்திருந்தால் ஆட்சியை ஆர்ஜேடி கூட்டணி பிடித்திருக்கலாம். இப்போது காங்கிரஸ்-இடதுசாரிகள் பீகாரில் விட்ட தவறுகளை மேற்கு வங்கத்தில் சரிசெய்வதில் தீவிரமாக உள்ளனர்.
மே.வ. சட்டசபை தேர்தல்
மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் காங்கிரஸ்- இடதுசாரிகள் கூட்டணி உறுதியாகி இருக்கிறது. மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை காங்கிரஸ்-இடதுசாரிகளுக்கான வாக்கு வங்கிகளில் பக்க பலமாக இருப்பது முஸ்லிம்களின் வாக்குகள். காலம் காலமாக முஸ்லிம் வாக்குகளில் சவாரி செய்து கொண்டிருக்கிற காங்கிரஸுக்கு இம்முறை ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி சவால் விட்டுக் கொண்டிருக்கிறது.
விஸ்வரூப மஜ்லிஸ் கட்சி
பீகாரில் முஸ்லிம் வாக்காளர்களின் நம்பிக்கைக்குரிய கட்சியாக மஜ்லிஸ் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. அதனால்தான் 5 தொகுதிகளில் ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி வென்றிருக்கிறது. காலந்தோறும் காங்கிரஸ், இடதுசாரிகள் அல்லது சோ கால்ட் மதச்சார்பற்ற சக்திகளுக்கு ஓட்டுப் போட்ட முஸ்லிம் வாக்காளர்கள் தங்களுக்கான தனித்துவமான கட்சியின் தேடலில் இருக்கின்றனர் என்பதையே பீகார் தேர்தல் உணர்த்தி இருக்கிறது.
அச்சத்தில் காங்.- இடதுசாரிகள்
அதனால் மேற்கு வங்கத்தில் மஜ்லிஸ் கட்சியின் ஆட்டத்தை எப்படி எதிர்கொள்வது? என்பது தொடர்பாக காங்கிரஸ்- இடதுசாரித் தலைவர்கள் படுதீவிரமாக ஆலோசனையில் இறங்கி இருக்கின்றனர். உள்ளூர் முஸ்லிம் சமூக பிரதிநிதிகளை சந்திப்பது உள்ளிட்ட பல்வேறு வியூகங்களுடன் பிஸியாக இருக்கின்றனர் இடதுசாரிகள்- காங். தலைவர்கள்.