1400 வருடங்களாக பின்பற்றப்படும் முத்தலாக் முறையை ஏன் மாற்ற வேண்டும்? சுப்ரீம் கோர்ட்டில் கபில்சிபல்
முத்தலாக்கை இஸ்லாமியர்கள் 1400 வருடங்களாக பின்பற்றுகிறார்கள் என்று உச்சநீதிமன்றத்தில் இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.
டெல்லி: இந்தியாவில் முத்தலாக் முறையை இஸ்லாமியர்கள் 1400 வருடங்களாக பின்பற்றப்படுகிறது என்று உச்சநீதிமன்றத்தில் இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் கூறியுள்ளது. முத்தலாக் முறையை கைவிட்டால் புதிய திருமணச் சட்டம் கொண்டுவரப்படும் என்று மத்திய அரசு நேற்று உச்சநீதிமன்றத்தில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த கணவர் ஒருவர், தன் மனைவியை கருத்துவேறுபாடு உள்ளிட்ட காரணத்தால் விவாகரத்து செய்ய 'முத்தலாக்' முறையைப் பின்பற்றுகிற வழக்கம் நடைமுறையில் உள்ளது. இந்த நடைமுறைக்கு எதிராகப் பல்வேறு வழக்குகள் நீதிமன்றங்களில் நடந்து வருகின்றன.
இந்த நிலையில், முத்தலாக் நடைமுறைக்கு எதிரான வழக்குகள் அனைத்தையும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர், நீதிபதிகள் குரியன் ஜோசப், ஆர்.எப். நாரிமன், யு.யு. லலித், அப்துல் நசீர் ஆகியோரை கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்கிறது.
விசாரணையின் போது முத்தலாக் முறையை முடிவுக்கு கொண்டுவந்தால் இஸ்லாமியர்கள் எந்த முறையில் விவகாரத்து செய்வார்கள் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்தது. முத்தலாக் கூறி உடனடியாக விவகாரத்து செய்யும் முறைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தால், மத்திய அரசு இஸ்லாமியர்களுக்கான திருமண மற்றும் விவகாரத்து தொடர்பான புதிய சட்டம் கொண்டுவரப்படும் என்று பதில் அளித்திருந்தது.
இன்று நடந்த 4ம் நாள் விசாரணையில் இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம், முத்தலாக்கை இஸ்லாமியர்கள் 1400 வருடங்களாக பின்பற்றுகிறார்கள் என தெரிவித்து உள்ளது. இந்து கடவுள் ராமர் அயோத்தியில் பிறந்தார் என இந்துக்கள் நம்பிக்கை வைத்துள்ளது போல இஸ்லாமியர்கள் முத்தலாக் மீது நம்பிக்கை கொண்டு உள்ளனர்.
கடந்த 1400 வருடங்களாக இஸ்லாமியர்கள் முத்தலாக் முறையை பின்பற்றுகிறார்கள், இது நம்பிக்கை சார்ந்த விவகாரமாகும். எனவே, இதில் அரசியலமைப்பு அறநெறி மற்றும் சமத்துவம் என்ற கேள்விக்கே இடம் கிடையாது என இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்துக்கு ஆதரவாக ஆஜரான காங்கிரஸ் தலைவரும், மூத்த வழக்கறிஞருமான கபில்சிபல் வாதம் செய்துள்ளார்.