அக்.1 முதல் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்... அத்தியாவசியப் பொருட்கள் விலை உயரும் அபாயம்
டெல்லி : சுங்க கட்டணத்தை நீக்குவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் காலவரையின்றி வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
இது குறித்து அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவர் பிம் வாத்வா செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது...
தவணை முறையில் சுங்க கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட எங்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் போக்குவரத்து துறை அமைச்சகம் தோல்வி அடைந்துவிட்டது.
எனவே சுங்க கட்டணங்களை முறைப்படுத்த வலியுறுத்தியும், சுங்க கட்டணத்தை ஒரே தவணையாக செலுத்தும் முறைக்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்தும் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
நாங்கள் நேற்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். இதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. எனவே வேறு வழியின்றி இந்த கடினமான முடிவு எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அகில இந்திய மோட்டார் காங்கிர தலைவர் பிம் வாத்வா தெரிவித்துள்ளார்.
அறிவித்தபடி வேலை நிறுத்தம் நடைபெற்றால், அத்திவாசிய பொருட்கள் விநியோகம் தடைபட்டு, விலை உயர்வதோடு, நாள் ஒன்றுக்கு சுமார் 1500-1700 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் அபாயம் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.