இந்திய வானில் அத்துமீறி நுழைந்த துருக்கி விமானங்கள்: நடுவானில் தடுத்த போர் விமானங்கள்
டெல்லி: ஒரே ரகசிய எண்ணை அளித்துவிட்டு துருக்கி நாட்டின் இரு பயணிகள் விமானம் இந்திய வான் எல்லைக்குள் நுழைந்ததால், பரபரப்பு ஏற்பட்டது. இந்திய போர் விமானங்கல் அனுப்பப்பட்டு, நடுவானில் விசாரணை நடத்தி, பைலட் செய்த தவறு கண்டுபிடிக்கப்பட்டதால் துருக்கி விமானங்கள் தொடர்ந்து இயங்க அனுமதிக்கப்பட்டன.
டெல்லி, மும்பை பயணிகள் விமானம்
துருக்கியில் இருந்து டெல்லி மற்றும் மும்பைக்கு நேற்று இரு பயணிகள் விமானங்கள் வந்துள்ளன. பாகிஸ்தான் வான் எல்லையை தாண்டி இந்திய வான் எல்லைக்குள் வந்தபோது, ஐஎப்எப் என்ற ரகசிய குறியீட்டு எண்ணை இரு விமானங்களின் விமானிகளும், தெரிவித்துள்ளனர். முதலில் வந்த விமான பயணி கூறிய குறியீட்டு எண்ணும், 2வது விமானத்தின் விமானி கூறிய எண்ணும் ஒன்றாகவே இருந்தது.
குறியீட்டு எண் குழப்பம்
இந்திய வான் எல்லைக்கு மேல் பறக்கும் ஒவ்வொரு அங்கீகரிக்கப்பட்ட விமானத்துக்கும் ஒரு குறியீட்டை இந்தியா அளிக்கும். அந்த குறியீட்டு எண்ணை சரியாக கூறினால், அவை அங்கீகரிக்கப்பட்ட விமானங்கள்தான் என்பதை உறுதி செய்துகொள்ளும். ஆனால் தவறாக கூறினாலோ அல்லது குறியீட்டு எண்ணை கூறாவிட்டாலோ அவை அத்துமீறிய ஊடுருவலாக கருதப்படும்.
சீறிய போர் விமானங்கள்
துருக்கி விமானங்களின் விமானிகள், ஒரே குறியீட்டு எண்ணை கூறியதால் இது அத்துமீறிய ஊடுருவலாக இருக்குமோ என்ற சந்தேகம் இந்திய விமானப்படைக்கு வலுத்தது. உடனடியாக ராஜஸ்தானின் ஜோத்பூரிலுள்ள விமானப்படை தளத்தில் இருந்து மிக்-21 ரக போர்விமானங்கள் இரண்டு, அனுப்பி வைக்கப்பட்டன.
நடுவானில் விசாரணை
துருக்கியின் இரு விமானங்களையும் இந்த போர் விமானங்கள் ஜெய்சால்மார் நகருக்கு மேலே, நடுவானில் இடை மறித்தன. வானில் வட்டமிட்டபடியே விமானப்படை அதிகாரிகள் துருக்கி விமானிகளிடம் விசாரணை நடத்தினர். அப்போதுதான், பைலட்கள் தங்களது தவறை உணர்ந்தனர்.
விமானிகளால் ஏற்பட்ட குழப்பம்
முதல் விமானத்தின் பைலட் தனக்கு அளிக்கப்பட்ட குறியீட்டு எண்ணை சரியாக கூறியிருந்ததும், 2வது விமானத்தின் பைலட், தெரியாத்தனமாக, முதல் விமானத்துக்குறிய குறியீட்டு எண்ணை கூறிவிட்டதும் உறுதியானது. மேலும், 2வது விமானத்திற்கு ஒதுக்கப்பட்ட குறியீட்டு எண்ணை, விசாரணையின்போது, பைலட் சரியாக தெரிவித்துள்ளார். அது சரியாக ஒத்துப்போனதால், அந்த விமானங்கள் மேற்கொண்ட பறக்க அனுமதிக்கப்பட்டன.
திடீர் பரபரப்பு
இந்திய விமானப்படை சரியான நேரத்தில் செயல்பட்டு விசாரணை நடத்தி உண்மையை கண்டுபிடித்துள்ளது. இதை உயர் அதிகாரிகள் பாராட்டினர். இந்திய போர்விமானங்கள் திடீரென விண்ணில் சீறிப்பாய்ந்ததும், நடுவானில் விசாரணை நடத்தப்பட்டதும் பரபரப்பை ஏற்படுத்தின.