ஹோட்டலில் இருக்கையில் சக ஊழியர் பாலியல் தொல்லை: ஏர் இந்தியா ஏர் ஹோஸ்டஸ் புகார்
டெல்லி: ஏர் இந்தியா நிறுவன விமான பணிப்பெண் தனக்கு சக ஊழியர் ஒருவர் பாலியல் தொல்லை அளித்ததாக போலீசில் புகார் அளித்துள்ளார்.
ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ஏற்கனவே ஏகப்பட்ட பிரச்சனைகள் உள்ளது. ஏர் இந்தியாவா அப்படி என்றால் அந்த விமானம் உரிய நேரத்தில் கிளம்பவே கிளம்பாது என்று மக்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ள எண்ணத்தை மாற்ற அந்நிறுவனம் போராடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஏர் இந்தியாவுக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது.
ஏர் இந்தியா நிறுவனத்தில் பணிபுரியும் விமான பணிப்பெண்(ஏர் ஹோஸ்டஸ்) ஒருவர் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலைய போலீசாரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
மும்பையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தபோது தனக்கு தன்னுடன் வேலை செய்யும் நபர் பாலியல் தொல்லை அளித்ததாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும் அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
மும்பையில் இருந்து டெல்லிக்கு சென்ற விமானம் தரையிறங்கியதும் அங்கிருந்த போலீசாரிடம் அவர் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த வழக்கை மும்பை அந்தேரி பகுதிக்கு மாற்றியுள்ளனர்.