போயிங் விமானங்களை எடைக்கு எடை போட்டு ஏர் இந்தியா நிறுவனத்தின் கடனை அடைக்க முடிவு
டெல்லி: போயிங் 787-800 ரக விமானங்களை வாங்குவதற்காக பெறப்பட்ட கடன் தொகையை அடைக்க மீண்டும் அந்த விமானங்களை விற்க ஏர் இந்தியா நிறுவனம் முடிவு செய்துள்ளது.
விமானங்கள் வாங்குவதற்காக பெறப்பட்ட கடன், தொழில் மூலதனத்திற்காக வாங்கிய கடன் அனைத்தையும் சேர்ந்து ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய் வரை கடன் உள்ளது. இதில் பெரும்பாலான தொகை போயிங் 787-800 ரக விமானங்களை வாங்குவதற்காக செலவிடப்பட்டது.
இந்நிலையில், ஏர் இந்தியாவின் கடன் சுமை தற்போது அதிகமாகியிருப்பதால் கடனுக்கு காரணமான அதே விமானங்களை விற்று நிதிதிரட்ட முடிவு செய்துள்ளது. இந்தக் கடனை அடைப்பதற்காக, அந்நிறுவனம் ஏர் இந்தியாவுக்கு சொந்தமான நிலங்கள், குடியிருப்புகள் உள்ளிட்ட பல்வேறு சொத்துக்களை விற்று வருகிறது. அந்த வகையில் தற்போது, தன்னிடம் இருந்த 21 ட்ரீம் லைனர் விமானங்களில் 9 விமானங்களை சிங்கப்பூரைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு விற்பனை மற்றும் குத்தகை என்ற முறைப்படி விற்றுள்ளது.
இந்த முறையின்படி, விமானத்தின் உரிமையாளாராக இல்லாமலே ஏர் இந்தியா நிறுவனத்துக்கு தேவை படும்போது, விற்ற விமானத்தையே குத்தகைக்கு எடுத்துக் கொண்டு நீண்ட காலம் உபயோகிக்க முடியும். இதன் மூலம் ஏர் இந்தியாவிற்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கும். இந்த முறைப்படி ஏற்கனவே, 12 விமானங்களை ஏர் இந்தியா விற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.