ட்ரீம்லைனர் பஞ்சாயத்து இன்னும் தீரலை... நடு வானில் உடைந்த 'வின்ட்ஷீல்ட்'!
டெல்லி: போயிங் ட்ரீம்லைனர் விமானத்தில் தொடர்கிறது தொழில்நுட்பப் பஞ்சாயத்து. 250 பயணிகள் மற்றும் ஊழியர்களுடன் கிளம்பிய ட்ரீம்லைனர் விமானத்தில், நடு வானில் அதன் முன்பக்க கண்ணாடி (வின்ட்ஷீல்ட்) உடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பிராங்பர்ட்டிலிருந்து டெல்லிக்கு புறப்பட்ட சில நிமிடங்களில் ஏர் இந்தியாவின் இந்த ட்ரீம்லைனரில் இந்த உடைப்பு நடந்தது. விமானம் கிளம்பிய சிறிது நிமிடங்களிலேயே இது நடந்ததால் அதிர்ஷ்டவசமாக பேராபத்து தவிர்க்கப்பட்டது.
இதையடுத்து உடனடியாக பிராங்க்பர்ட்டுக்கே விமானத்தை கொண்டு வந்து தரையிறக்கினர். மே 9ம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது. அன்று 241 பயணிகள் மற்றும் 10 ஊழியர்களுடன் விமானம் டெல்லிக்குப் புறப்பட்டது.
விமானம் மேலே எழுந்த சில நிமிடங்களிலேயே வின்ட்ஷீல்ட் ஒன்று உடைந்தது. இதையடுத்து விமானத்தை விமானி மீண்டும் பிராங்க்பர்ட் விமான நிலையத்திலேயே தரையிறக்கினார். யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.
கடந்த 6 மாதங்களில் ஏர் இந்தியா ட்ரீம்லைனர் விமானத்தில் வின்ட்ஷீல்ட் உடைந்தது 2வது முறையாகும் இது. கடந்த நவம்பர் மாதத்திலும் இதேபோலத்தான் டெல்லி -மெல்போர்ன் இடையிலான ஏர் இந்தியா விமானத்தில் வின்ட்ஷீல்ட் உடைந்தது.
இதுவரைக்கும் ஏர் இந்தியா விமானத்தில் இதேபோல 5 முறை வின்ட்ஷீல்ட் உடைந்த சம்பவங்கள் நடந்துள்ளதாக ஏர் இந்தியா அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். இதுகுறித்து போயிங் நிறுவனத்தை ஏர் இந்தியா தொடர்பு கொண்டுள்ளதாம். புதிய விமானங்களில் வின்ட்ஷீல்ட் உடைவது என்பது அரிதும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
சமச்சீரில்லாத வெப்ப நிலை அல்லது ஏதாவது மோதுவது போன்ற காரணத்தால் பொதுவாக வின்ட்ஷீல்ட் உடையுமாம். ஆனால் அது பழைய விமானத்தில்தான் அதிகம் நடக்கும். புதிய விமானத்தில் இப்படி ஏற்படுவது அரிது என்கிறார்கள்.
இதற்கிடையே பாரீஸ் விமானத்தில் ஒரு ட்ரீம்லைனர் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தரையிறக்கிய சம்பவமும் நடந்துள்ளது.
உலகின் மிகப் பெரிய பயணிகள் விமானம் என்ற பெருமை படைத்த ட்ரீம்லைனர் விமானங்கள் அடிக்கடி இதுபோன்ற தொழில்நுட்பக் கோளாறுகளில் சிக்கி வருவது தொடர் கதையாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.