விஜயவாடாவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்து... நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள்
அமராவதி: விஜயவாடா விமான நிலையத்தில் தரையிறங்கும்போது கட்டுப்பாட்டை இழந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கத்தர் தலைநகர் தோஹாவில் இருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் ஒன்று விஜயவாடா சர்வதேச விமான நிலையத்தில் இன்று மாலை தரையிறங்கியது. அப்போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த விமானம், ஓடுபாதை அருகிலிருந்த மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்து விஜயவாடா சர்வதேச விமான நிலையத்தில் 4.50 மணியளவில் ஏற்பட்டுள்ளது. இந்த விமானத்தில் 64 பயணிகள் இருந்ததாகவும் அவர்களில் 19 பேர் விஜயவாடாவில் இறங்க இருந்தனர் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்தால் விமானத்தின் வலதுபுற இறக்கை சேதமடைந்துள்ளதாகவும் இருப்பினும் விமானத்திலிருந்த பயணிகள், விமான குழுவினர் உள்ளிட்ட யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை என்றும் விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.