அடிப்பகுதியில் புகை: ஏர் இந்தியா விமானம் மும்பை ஏர்போர்ட்டில் அவசர தரையிறக்கம்
மும்பை: ஹைதராபாத்தில் இருந்து கிளம்பிய ஏர் இந்தியா விமானம் ஒன்றின் அடிப்பகுதியில் புகை வந்ததால் அது மும்பை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
ஏர் இந்தியா விமானம் ஒன்று 120 பயணிகளுடன் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து இன்று காலை கிளம்பியது. விமானத்தின் அடிப்பகுதியில் புகை வந்தது கண்டுபிடிக்கப்பட்டவுடன் அது மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
பயணிகள் அனைவரும் கீழே இறக்கிவிடப்பட்டனர். இந்த சம்பவத்தை அடுத்து விமான நிலையத்தின் பிரதான ரன்வே முடப்பட்டது. இதனால் மும்பை விமான நிலையத்தில் இருந்து கிளம்ப வேண்டிய மற்றும் வர வேண்டிய விமானங்கள் 30 நிமிடங்கள் தாமதமாகின.
இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் விமானத்தின் டயர் வெடித்ததால் புகை வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. விமான நிலையங்கள் மற்றும் விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த சம்பவம் நடந்தது பயணிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
நேற்று கூட 6 விமானங்களுக்கு போன் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.